இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 08, 2014

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வித் துறையில் உள்ள தனியார் / அரசு / ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளுக்கு 2013-14ம் ஆண்டிற்கான சுழற்கேடயங்கள் வழங்க பள்ளிகளின் பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு

சிறப்பு டி.இ.டி., தேர்வு: 22க்குள் 'ஹால் டிக்கெட்'

'சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,), 'ஹால் டிக்கெட்' 22ம் தேதிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணையதளத்தில் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.பி., அறிவிப்பில், 'மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு டி.இ.டி., தேர்வு, மே 21ம் தேதி, 32 மாவட்ட தலைநகரங்களிலும் நடக்கும். தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், டி.ஆர்.பி.,யின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், வரும், 22ம் தேதிக்குள் வெளியிடப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், வரும், 28ம் தேதி தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. தேர்தல் காரணமாக, மே 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு, 5,300 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல்: இன்று மாலை வெளியீடு

தமிழகத்தில், இன்று மாலை, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், வரும், 24ம் தேதி, ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில், மார்ச், 29ம் தேதி, மனு தாக்கல் துவங்கியது. கடந்த, 5ம் தேதி நிறைவு பெற்றது. 1,134 ஆண்கள், 121 பெண்கள், ஒரு திருநங்கை என, மொத்தம் 1,256 பேர் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனுக்கள், நேற்றுமுன்தினம் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது, 291 ஆண்கள், 57 பெண்கள் என, மொத்தம், 348 மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள, 908 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆலந்தூர் சட்டசபை தொகுதியில், மூன்று பெண்கள் உட்பட, 19 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களில், ஒரு பெண் உட்பட, ஐந்து பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர், இன்று மாலை, 3:00 மணிக்குள், வாபஸ் பெற வேண்டும். அதன்பின், அங்கீகாரம் இல்லாத, பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு, சின்னம் ஒதுக்கப்படும்.

ஒரே சின்னத்திற்கு, இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டால், குலுக்கல் முறையில், சின்னம் ஒதுக்கப்படும். இப்பணி முடிந்த பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

அரசு பள்ளி மின் கட்டணம்: இயக்குனரகம் முடிவு

  அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில், குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்ய, இயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும், 23 ஆயிரம் அரசு ஆரம்பப் பள்ளிகள், 7,000 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றின் மின் கட்டண செலவுக்கு, தமிழக அரசு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இந்த தொகை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, பிரித்து தரப்படுகிறது. இதில், பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கட்டணத்தை செலுத்த, சில நாள் கால தாமதம் ஆனாலும், உடனடியாக மின் இணைப்பை துண்டித்து விடுவதாக, மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை, மின்வாரியத்திற்கு, தொடக்கக் கல்வித் துறை சமீபத்தில் வழங்கி உள்ளது.

மேலும், மின் கட்டணம் செலுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வகையில், 30 ஆயிரம் பள்ளிகளின் மின் கட்டண விவரங்களை, மாவட்ட வாரியாக, தொடக்கக் கல்வித் துறை, இயக்குனரகத்திற்கு தெரிவிக்கும் படியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், இயக்குனரகமே மின் கட்டணத்தை செலுத்தும் எனவும், மின் வாரிய அதிகாரிகளுக்கு, இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை பெறப்பட்டதும், புதிய நடைமுறை அமலுக்கு வரும் என, துறை வட்டாரம் தெரிவித்தது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள், மின் கட்டணத்தை செலுத்துகின்றனர்.

இந்த பள்ளிகளிலும், ஆங்காங்கே பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, தொடக்கக் கல்வித் துறையை போல், பள்ளிக்கல்வி இயக்குனரகமே, நேரடியாக மின் கட்டணத்தை செலுத்தினால், பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு பிரச்னை வராது என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, துவக்கப் பள்ளியாகவும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, நடுநிலைப் பள்ளியாகவும் தமிழகத்தில் உள்ளது.

IGNOU B.ed Genuiness form

Saturday, April 05, 2014

அழியாத மை' பற்றிய அருமையான குறிப்புகள் - dinamalar

தேர்தலில் ஓட்டளித்தற்கான அடையாளமாக, கை விரலில் வைக்கப்படும் அழியாத மை, கர்நாடக மாநிலத்தில் உள்ள, 'மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ்' நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தின், 39 மற்றும் புதுச்சேரி தொகுதி உட்பட, நாடு முழுவதும், 543 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல், இம்மாதம் 7ல் துவங்கி, மே 12ல் நிறைவடைகிறது. ஒருவரே பல முறை ஓட்டுப் போட முயல்வது போன்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்காக, ஓட்டளிக்கும் வாக்காளரின் கைவிரலில், ஓட்டளித்ததற்கான அடையாளமாக அழியாத மை வைக்கப்படுகிறது.

இந்த மை, பல மாதங்களுக்கு அழியாமல் இருக்கும். இந்த மையை, கர்நாடக மாநில அரசு நிறுவனமான, மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் தயாரிக்கிறது. நம் நாட்டில் நடைபெறும் தேர்தல்கள் மட்டுமின்றி, பல வெளிநாடுகளில் நடைபெறும் தேர்தல்களுக்கும், இந்த நிறுவனம் அழியாத மையை வழங்குகிறது. இந்நிறுவனம், 1937ல், அப்போதைய மைசூர் மகாராஜாவாக இருந்த, நல்வாடி கிருஷ்ணராஜ உடையாரால் துவக்கப்பட்டது. கடந்த, 1962ல் இருந்து, இந்திய தேர்தல் கமிஷனுக்கு அழியாத மை தயாரித்து வழங்கி வருகிறது.

நம் நாட்டில், 2006ல் இருந்து, வாக்காளரின் விரலில், இடது கை ஆட்காட்டி விரல் நகத்தில், ஊதா நிறத்தில் சிறிய கோடாக அழியாத மை வைக்கப்படுகிறது. இந்த மையில், 'சில்வர் நைட்ரேட்' என்ற ரசாயனம் உள்ளது; இதை நீக்குவது எளிதல்ல.

இ.பி.எப்., கணக்கில் மாற்றம் செய்ய மத்திய அரசு மறுப்பு


ி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் (இ.பி.எப்.,) சந்தா தொகையில், உறுப்பினர்களின் அடிப்படை ஊதியத்துடன், சலுகைப் படியை சேர்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தில் இருந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்திற்கு கடிதம் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன், இதர சலுகைப்படிகளையும் சேர்த்து கணக்கிட்டு, அதன் அடிப்படையில், வருங்கால வைப்பு நிதியை பிடித்தம் செய்தால், நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். அதே சமயம், ஊழியர்களின் வைப்பு நிதி கணக்கில், சேமிப்பு அதிகரிக்கும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது என்பது, ஐந்து கோடி உறுப்பினர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

'நம்ம பள்ளி, நம்ம குழந்தை': துவக்கப் பள்ளிகளுக்கு கையேடு தர முடிவு

 
    அரசு துவக்கப்பள்ளியில் வரும், கல்வியாண்டில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, அழகிய வண்ணப்படங்களுடன் கையேடு வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு மூலம் கடந்த, 2001ல், ஆறு முதல், 14 வயதுடைய அனைத்து வயது குழந்தைகளும், ஜாதி, மதம் மற்றும் சமூக வேறுபாடின்றி அனைவரும் கல்வி கற்கும் நோக்கத்துடன், 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (எஸ்.எஸ்.ஏ) என்ற திட்டம், மாநிலம் முழுவதும் துவங்கப்பட்டது.

மாணவர் சேர்க்கை: நவீன வசதி, புதிய வடிவில் கல்வி வழங்குதல், இதர திறன் வளர்த்தல் மூலம், தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகரிப்பு மற்றும் அரசு பள்ளிகளிலும் தரமான, இலவச கல்வி வழங்கும் நடவடிக்கையால், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

அரசு பள்ளி: தனியார் பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளில், குறிப்பிட்ட சதவீதத்தினர் நடுநிலை கல்விக்குப்பின், அரசு பள்ளிகளை நாடுகின்றனர். தற்போது அரசு பள்ளிகளில், தமிழக அரசு சார்பில், 14 இலவச பொருட்கள் வழங்குவதால், மாணவர்கள் ஊக்கம் பெறுகின்றனர். இங்கு, ஆறு முதல், 14 வயது வரையுள்ள, பள்ளி வயது குழந்தைகளை, பள்ளியில் சேர்ப்பதற்கும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், கிராமக்கல்விக்குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, சிறப்பான பயிற்சி வழங்குவது, எஸ்.எஸ்.ஏ.,வின் முக்கிய குறிக்கோள். எஸ்.எஸ்.ஏ., சார்பில், 'நம்ம பள்ளி, நம்ம குழந்தை' என்ற தலைப்பில், அழகிய வண்ணப்படங்களுடன், கையேடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
கட்டாய கல்வி: கிராமக்கல்வி குழு செயல்பாடுகள், குழந்தைகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், சட்டத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் பங்கு, உள்ளூர் அதிகார மையத்தின் பங்கு, மேலாண்மை குழுவின் பங்கு மற்றும் கூட்டம், மேம்பாட்டு திட்டத்தில் இருக்க வேண்டியவை, பள்ளி கல்வித்துறைக்கு உதவும் பிற துறைகள் உள்ளிட்ட விவரங்கள், இந்த கையேட்டில் அடங்கி உள்ளன. இந்த கையேடு, தமிழகத்தில் உள்ள, இரண்டு லட்சத்து, 65, 284 கிராமக் கல்விக்குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், ஆசிரியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த கையேடு வழங்கப்படும். எஸ்.எஸ்.ஏ., ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:

தனியார் பள்ளிக்கு நிகராக, அரசு துவக்கப்பள்ளியில், வரும், 2014- - 15ம் கல்வியாண்டில், பள்ளி மேலாண்மை குழு மூலம், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, எஸ்.எஸ்.ஏ., திட்டமிட்டுள்ளது.

கையேடு: இதற்காக, தொடக்க கல்வி இயக்கம், சென்னை யுனிசெப் மற்றும் மதுரை மனித உரிமை கல்வி நிறுவனமும் இணைந்து, இக்கையேட்டை தயாரித்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

PAYROLL 9.1 - 100% DA SOFTWARE FOR PAYROLL DESIGNED BY NIC

Friday, April 04, 2014

பென்ஷனுக்கு 2 மாத தீர்வு

ி: 'பென்ஷன் தொடர்பான புகார்களுக்கு இரண்டு மாதத்தில் தீர்வு காண வேண்டும்' என, அனைத்து அமைச்சகங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் வி.நாராயணசாமி தலைமையிலான மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பென்ஷன் தொடர்பான புகார்களுக்கு விரைவில் தீர்வு காணப்படுவது இல்லை என, பரவலாக புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பென்ஷன் தொடர்பாக, எந்த ஒரு புகார் தெரிவிக்கப்பட்டாலும், இரண்டு மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும். புகார்களுக்கு உடனடியாக பதில் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் இடைக்கால பதில் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கல்வி துறை வழங்கிய புத்தகத்தில் இருந்து 61 மதிப்பெண்களுக்கு 17 கேள்விகள் கேட்பு

  படிப்பில் பின் தங்கியிருக்கும் மாணவ, மாணவியருக்கு உதவும் வகையில், பள்ளிக்கல்வித் துறை, இந்த ஆண்டு, சிறப்பு வினா வங்கி புத்தகத்தை தயாரித்து வழங்கி இருந்தது. நேற்று நடந்த, 10ம் வகுப்பு கணிதத் தேர்வில், இந்த புத்தகத்தில் இருந்து, 61 மதிப்பெண்களுக்கான, 17 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்த புத்தகத்தைப் பார்த்து தயாரான மாணவ, மாணவியர், அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும்; குறிப்பாக, தோல்வியின் விளிம்பில் உள்ள மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, பள்ளிக்கல்வி இயக்ககம், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு என, சிறப்பு வினா வங்கி அடங்கிய புத்தகத்தை தயாரித்தது.

இந்த புத்தகங்கள், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு, விடை அளிக்கும் முறை குறித்து, மாணவர்களுக்கு, ஆசிரியர் விளக்கினர். இதிலிருந்து, பிளஸ் 2 தேர்வில் அதிகளவு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதேபோல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதத் தேர்விலும், 61 மதிப்பெண்களுக்கு, 17 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதுகுறித்து, அரசுப் பள்ளி ஒன்றின் கணித ஆசிரியர் கூறியதாவது: இரு மதிப்பெண் பகுதியில், எட்டு கேள்விகளும், ஐந்து மதிப்பெண் பகுதியில், ஒன்பது கேள்விகளும், கல்வித் துறை வழங்கிய புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டு உள்ளன. இந்த புத்தகத்தை பார்த்து தயாரான, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர், சுளையாக, 61 மதிப்பெண் பெறுவர்.

எனினும், எப்போதும் கேட்கப்படும், 'இயற்கணிதம்' என்ற பாடத்தில் இருந்து, 'காரணிபடுத்துக' மற்றும் 'வர்க்கமூலம் காண்க' என்ற கேள்விகள், இந்த முறை கேட்கவில்லை. இது, மாணவர்களுக்கு, ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு, அந்த ஆசிரியர் கூறினார். 'நேற்று நடந்த கணிதத் தேர்வு, பெரிய அளவிற்கு கடினம் இல்லை' என, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்தனர். எனினும், 'ஐந்து மதிப்பெண் பகுதியில், 41வது கேள்விக்கான விடை, பல அடுக்குகள் போட்டும், இறுதியில் விடை வரவில்லை' என, பல மாணவர்கள் தெரிவித்தனர். இதனால், 'சென்டம்' கிடைக்க வாய்ப்பில்லை என, மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

சிறப்பு டி.இ.டி., தேர்வு தள்ளி வைப்பு


   மாற்றுத்திறனாளிகளுக்கு, இம்மாதம், 28ம் தேதி நடத்த இருந்த, சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,), லோக்சபா தேர்தல் காரணமாக, மே, 21ம் தேதிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), தள்ளி வைத்துள்ளது. 'மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர் வேலை வாய்ப்பை பெறும் வகையில், அவர்களுக்கு, சிறப்பு டி.இ.டி., தேர்வு நடத்தப்படும். இவர்களுக்கு, தமிழக அரசே, தேர்வு குறித்து, 40 நாள் இலவச பயிற்சி அளிக்கும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, சிறப்பு டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது.

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாநிலம் முழுவதும், மார்ச் முதல் வாரத்தில் இருந்து, இலவச பயிற்சியை அளித்து வருகிறது. வரும், 15ம் தேதியுடன், பயிற்சி முடிகிறது. 700க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள், பயிற்சியில் பங்கேற்று உள்ளனர். போட்டி தேர்வு, வரும், 28ம் தேதி நடக்க இருந்த நிலையில், தேர்தல் காரணமாக, மே, 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 32 மாவட்டங்களிலும், 40 மையங்களில், சிறப்பு தேர்வு நடக்கிறது.

மே 15ம் தேதி வரை தபால் ஓட்டு


தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் கூறியதாவது: தேர்தல் பணியில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லும், போலீசாரும், தபால் ஓட்டு போடலாம். அவர்களுக்கான தபால் ஓட்டு, எஸ்.பி., மூலமாக, வினியோகம் செய்யப்படும். தேர்தலுக்கு, ஒரு வாரத்திற்கு முன்பாக, போலீசாருக்கு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க, சிறப்பு முகாம் நடத்தப்படும். இம்முகாமில், ஓட்டுச் சீட்டு வழங்கப்படும். அங்கே ஓட்டுப் பெட்டி வைக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், அங்கேயே ஓட்டு போட்டு, பெட்டியில் போடலாம். அன்று ஓட்டு போட முடியாதவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக அறை முன் வைக்கப்பட்டிருக்கும் ஓட்டுப் பெட்டியில், மே 15ம் தேதி மாலை வரை, ஓட்டு போடலாம். தபால் ஓட்டு போடும் அனைவரும், மே 15ம் தேதி வரை, ஓட்டு போடலாம்.

கிராஜுவிட்டி என்றால் என்ன?


      கிராஜுவிட்டி என்பது ஊழியர்கள் நிறுவனத்திற்கு ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் நிறுவனத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் பயனுள்ளதொரு பணி ஓய்வுத் தொகையே கிராஜூட்டி. ஊழியர்கள் பல்வேறு காரணங்களின் பொருட்டு தங்கள் பணியை விட்டு விலக நேரிடலாம், ஆனால் கிராஜுவிட்டித் தொகை குறிப்பாக பணி ஓய்வின் போது கைகொடுக்கக் கூடிய ஒன்று. கிராஜுவிட்டி பெறுவதற்கான தகுதி வருமான வரிச் சட்டத்தின் படி, ஊழியர் ஒருவர் நிறுவனம் ஒன்றில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ந்து முழுநேரப் பணியில் இருந்திருப்பாரானால், அவருக்கு கிராஜுவிட்டி வழங்கப்பட வேண்டும்

. கிராஜுவிட்டி தொகை எப்போது வழங்கப்படும்?

கிராஜுவிட்டி தொகை வழங்குவதற்கென சில விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. முதலில், குறிப்பிட்ட நிறுவனத்தின் ஊழியர் பட்டியலில் குறைந்த பட்சம் 10 நபர்களாவது இருக்க வேண்டும். இப்பட்டியலில் இடம்பெறுவோர் தற்காலிக பணியாளர்களாக இருக்கக்கூடாது; அனைவரும் மாதாந்திர சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட நிரந்தர ஊழியர்களாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 5 வருடங்கள் குறிப்பிட்ட அந்நிறுவனத்தில் ஒரு நபர் குறைந்தது 5 வருடங்களாவது பணியாற்றியிருக்க வேண்டும். எனினும், பணியில் இருக்கும் போதே ஒரு ஊழியர் மரணமடைய நேர்ந்தால், இந்த ஐந்து வருட காலம் என்ற விதிமுறை தளர்த்தப்படும். எனவே, அவ்வூழியரின் பணிக்காலம் 1 வருடம் என்ற அளவில் குறைவாகவே இருந்தாலும் கூட, முதலாவதாகக் கூறப்பட்ட விதிமுறை நிறைவேறும் பட்சத்தில் அவ்வூழியர் கிராஜுவிட்டி பெறும் தகுதியைப் பெறுவார்.

கிராஜுவிட்டிக்கு வரிக்கு உட்பட்டதா??

ஊழியர் ஒருவருக்கு வழங்கப்படும் கிராஜுவிட்டித் தொகை, ஊதியத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமாக, வருமான வரி ரிட்டர்ன்களை தாக்கல் செய்யும் போது "சம்பளத்திலிருந்து கிடைக்கும் வருவாய்" என்ற பிரிவின் கீழ் வரி விதிப்புக்குட்படுத்தப்படுகிறது. அரசுப் பணியாளர் இதுவே அவ்வூழியர் அரசுப் பணியில் இருந்திருப்பாராயின், வருமான வரிச் சட்டத்தின் செக்க்ஷன் 10 (10) என்ற சட்டப்பிரிவின் கீழ், கிராஜுவிட்டியாக அவருக்கு வழங்கப்படும் தொகைக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அரசு ஊழியர்கள் அதிர்ஷ்டசாலிகளே! கிராஜுவிட்டியாக வழங்கப்படக்கூடிய தொகை கிராஜுவிட்டி தொகையானது, ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்ததிலிருந்து அவர் நிறைவு செய்த ஒவ்வொரு பணி ஆண்டுக்கும் தலா 15 நாள் ஊதியம் என்ற அளவில் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது (இங்கு ஊதியம் என்பது கடைசி 10 மாத பணிக்காலத்தின் போது பெறப்பட்ட சராசரி ஊதியம் என்பதாகக் கொள்ளப்படுகிறது).

Thursday, April 03, 2014

G.O no.96 TN govt hike 10% D.A

மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வழங்கப்படுகிறது


    மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படுகிறது. பிளஸ்–2 தேர்வு முடிவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வை எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்கள். கடந்த வருடம் போலவே இந்த வருடமும் மே மாதம் 9–ந்தேதி பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அதிகார பூர்வமாக அரசு தேர்வுத்துறை அறிவித்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த வருடம் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே மாதம் 4–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை வழங்கப்பட்டது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் 9–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை வழங்கப்பட்டது. மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை ஜூலை 31–ந்தேதிக்குள் முடிக்க அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

மே முதல் வாரத்தில் வினியோகம் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் முதல் வாரத்தில் கொடுக்கப்பட உள்ளதாக மருத்துவக்கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 555 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 383 இடங்கள் ஆகும். இந்த இடங்கள் போக மீதம் உள்ள 2 ஆயிரத்து 172 இடங்கள் தமிழகத்திற்கு கிடைக்கும். பல் மருத்துவ படிப்பில் சேர சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மட்டும்தான். இந்த கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேர 100 இடங்கள் மட்டுமே உள்ளன.

அதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 இடங்கள். இந்த இடங்கள் தவிர 85 இடங்கள் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் தமிழக மாணவர்கள் சேரலாம். அதுவும் கடந்த வருடம் சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டன. கலந்தாய்வு மருத்துவ கவுன்சிலிங் முடிந்ததும் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும். மருத்துவ படிப்பில் சேருவதற்கு கடந்த வருடம் விண்ணப்பங்கள் குறைவாக வந்திருந்தன. அதாவது 2012–ம் ஆண்டை விட 700 விண்ணப்பங்கள் குறைவாக இருந்தன.

Wednesday, April 02, 2014

CHECK LIST for PRESIDING OFFICERS General Elections 2014

வாக்கு சாவடி தலைமை அலுவலருக்கான கையேடு, பொருள்கள் சரிபார்த்தலுக்கான குறிப்பேடுகள், முகவருக்கான கையேடு

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7ம் தேதி கவுன்சலிங்

   குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் 7ம் தேதி சென்னையில் நடக்கிறது. கடந்த 2011-13ம் ஆண்டுக்கான பணியிடங்களில் நேரடியாக பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2012 ஜூன் 13ம் தேதி வெளியிட்டது. இதற்கான எழுத்து தேர்வு 2012 நவம்பர் 4ம் தேதி நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் நேர்காணல் இல்லாத மீதம் உள்ள பதவிகளுக்குஉரியவர்களை தேர்வு செய்வதற்காக 2ம் கட்ட கவுன்சலிங் நடக்க உள்ளது.

இதற்கான தெரிவுப்பட்டியல் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கவுன்சலிங் 7ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கிறது. இதுதொடர்பான அழைப்பு கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  மேலும், அழைப்பு கடிதங்களை மேற்கண்ட இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் 256 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் விண்ணப்பத்தில் குறித்துள்ள விவரங்கள் தவறாக இருந்தால் கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது. கவுன்சலிங் காலை 8.30 மணிக்கு தொடங்கும். பங்கேற்க தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை போன்ற சிறப்பு பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள், நிரப்பப்படாத பணியிடங்கள் இருந்தால் அவற்றை நிரப்புவதற்கான கவுன்சலிங் பின்னர் நடக்கும்.