இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, February 27, 2018

2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு: முதல் கட்டமாக கிராமங்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவு


2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக தமிழகத்தில் முதல் கட்டமாக தாலுகா வாரியாக கிராமங்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு உயரதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகிறது.

இதில் கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். 2001-2011 காலக்கட்டத்தில் மக்கள் தொகை 15.60 சதவீதம் வளர்ச்சியடைந்திருந்தது. இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 பேர், பெண்கள் 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 087 பேர் இருந்தனர். இதில் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் இருந்தது. கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் 73.45ல் லிருந்து 80.33 ஆக அதிகரித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகள் ெதாடங்கியுள்ளது. அதன்படி, தாலுகா வாரியாக கிராமங்கள், சிறு கிராமங்களின் பட்டியல்கள் சரிபார்த்து வழங்க தாசில்தார்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து தேர்தல் பிரிவு உயரதிகாரிகள் கூறுகையில், ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதில் முதல் கட்ட பணியாக தமிழகம் முழுவதும் தாலுகா வாரியாக கிராமங்கள், சிறு கிராமங்கள் குறித்த விவரங்கள், புதிதாக பிரிக்கப்பட்ட தாலுகாக்கள் போன்றவற்றை சரிபார்த்து பட்டியல் தயாரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பணிகள் முடித்த பின்னர் கணக்கெடுப்பில் ஈடுபட தேவையான ஆட்கள், செலவினத்தொகை போன்ற விவரங்களின் அறிக்கை தயாரிக்கப்படும். தொடர்ந்து 2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்படும்’ என்றனர்.

நெட் தேர்வு: விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி: தேர்வுக்கான தாள்கள் இரண்டாகக் குறைப்பு


கல்லூரி ஆசிரியர் பணிக்கு 'நெட்' தகுதித் தேர்வுக்கான முழுமையான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது. இதற்கு மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி நாளாகும். இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் கல்லூரி -பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கும் செட் அல்லது நெட் தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இதில் நெட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.

இப்போது 2018-ஆம் ஆண்டுக்கான 'நெட்' தேர்வு அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேர்வு எப்போது?: 2018-ஆம் ஆண்டு நெட் தேர்வு ஜூலை 8-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தை மார்ச் 5 ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடாசி நாளாகும். கட்டணம் எவ்வளவு?: தேர்வை எழுத பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.,) ரூ. 500, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 250 என்ற அளவிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு தாள்கள் மட்டுமே! இந்தத் தேர்வில் இதுவரை மூன்று தாள்கள் இடம்பெற்றிருந்தன. 2018 ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வில் இரண்டு தாள்கள் மட்டுமே இடம்பெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான முதல் தாள் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை 1 மணி நேரம் மட்டும் நடத்தப்படும். இதில் 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதேபோல 100 மதிப்பெண்களுக்கான இரண்டாம் தாள் காலை 11 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும். வயது வரம்பு அதிகரிப்பு: கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற நெட் தேர்வை எழுதுபவர்களுக்கு வயது உச்ச வரம்பு எதுவும் கிடையாது. ஆனால், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற நெட் தேர்வை எழுதுபவர்களுக்கு இதுவரை அதிகபட்சம் 28 வயது, உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த உச்ச வரம்பை இப்போது 30 வயதாக சிபிஎஸ்இ உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இனி 30 வயதுடையவர்களும் இந்தத் தேர்வை எழுத முடியும்.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு


அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. அதில், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி பேசியதாவது:

அனைத்து கல்வி மாவட்டங்களிலும், பள்ளிகளுக்கு நேரில் சென்று, மாணவர் எண்ணிக்கை மற்றும் பதிவேடுகளை, அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தினமும், அரசு குறிப்பிட்ட நேரத்தில், ஆசிரியர்கள், பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். அதை, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.வரும் கல்வி ஆண்டு துவங்கும் முன், பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் உதவியுடன், பள்ளி செல்லா குழந்தை களை, அடையாளம் காண வேண்டும். அவர்களை பள்ளிகளில் சேர்க்க, பெற்றோரை அறிவுறுத்த வேண்டும்.

பள்ளிகளில், சரியான மாணவர் எண்ணிக்கையை மட்டும், பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்; போலி பதிவுகள் இருக்க கூடாது. பள்ளிக்கு வராமல், வேலை நேரத்தில் வேறு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுப்பு எடுக்காத ஆசிரியர்களை, அரசு கவுரப்படுத்தி வருகிறது. வரும் கல்வி ஆண்டில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்களின் எண்ணிக்கை, 50 ஆயிரமாக உயர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்

Monday, February 26, 2018

பொதுத்தேர்வுக்கு பின்னர் இலவச நீட்தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படும்


தமிழகத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்கள் பொதுத்தேர்வுகள் முடிந்த உடனே செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான இலவச மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி முதல்கட்டமாக 25 மையங்களும், இதைத் தொடர்ந்து டிசம்பர் இறுதி முதல் 100 பயிற்சி மையங்களும் செயல்பட்டன. அவற்றில் சுமார் 14,000 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதையடுத்து கடந்த 10 நாள்களுக்கு முன்பு மேலும் 312 மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த 412 மையங்களும் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக 72,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக கடந்த வாரங்களில் பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றன. இதன் காரணமாக பயிற்சி வகுப்புக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியது. கடந்த பிப்.24,25 ஆகிய நாள்களில் பெரும்பாலான பயிற்சி மையங்கள் செயல்படவில்லை. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால் மாணவர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இதையடுத்து வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மையங்கள் தாற்காலிகமாக செயல்படாது. தேர்வுகள் முடிவடைந்த பின்னர் ஏப்.3-ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் மே.3-ஆம் தேதி வரை ஒரு மாத காலம் சிறப்புப் பயிற்சிகள், கையேடுகள் வழங்கப்படும் என்றனர். நீட்தேர்வு நாடு முழுவதும் மே.6-ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க விரைவில், 'ஹெல்ப்லைன்


மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களை போக்க, 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில், '14417' என்ற, ஹெல்ப்லைன் வசதி, விரைவில் துவக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், காராப்பாடியில், அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் துவங்கவுள்ளது. பாடத்திட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களை போக்கிடவும், மேல்நிலை படிப்புக்கு பின், எந்த கல்லுாரிகளில் சேர்வது, தேர்வு முறைகள் உள்ளிட்ட கேள்விகளுக்கு, 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில், '14417' என்ற, 'ஹெல்ப்லைன்' வசதி விரைவில் துவக்கப்படும்.

மாணவர்களின் தற்கொலை எண்ணங்கள் தோன்றாமல் தவிர்க்கவும், 'சிநேகா' என்ற தொண்டு நிறுவனத்துடன், கல்வித்துறை இணைந்து, மாணவர்களின் வீட்டிற்கே சென்று, 'கவுன்சிலிங்' அளிக்கப்படும். புதிய பாடத்திட்டங்களை, மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவாக, இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, February 25, 2018

தமிழகம் முழுவதும் ஆசிரியரின்றி இயங்கும் ஆங்கிலவழி பள்ளிகள்


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆங்கில வழி வகுப்புகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் தமிழ், ஆங்கில வழி மாணவர்கள் ஒரே வகுப்பில் அமர்ந்து பயிலும் அவலம் நிலவுவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் ஏறத்தாழ 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன.

வேலூர் மாவட்டத்தில் 5760 தொடக்கப்பள்ளிகளும், 450 நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவை அனைத்துமே அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள்தான். இவற்றில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு வகுப்பில் 35 மாணவர்களுக்கு மேல் படித்து வந்தனர். இன்று, ஒரு வகுப்புக்கு 80 பேர் வீதம் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் சென்னை, ஈரோடு, நாகர்கோவில் உட்பட குறிப்பிட்ட நகரங்களை தவிர்த்த பிற நகரங்களில் ஒரு வகுப்புக்கு 10 பேர் என்பதே அதிகபட்சம்தான். இதனால் இத்தகைய பள்ளிகள் இன்று ஓராசிரியர் அல்லது ஈராசிரியர் பள்ளிகளாக தரம் குறைந்துள்ளன.

இந்நிலையில்தான் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க ஆங்கிலவழிக்கல்வியை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக கடந்த 2013ம் ஆண்டு மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் நிதியுதவிப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.

இதில் கிராமப்புறங்களில் உள்ள ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளும் அடக்கம். ஆனால், இதுவரை ஆங்கிலவழிக்கல்விக்கு என்று தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து, தமிழ் மற்றும் ஆங்கிலவழிக்கல்வி மாணவர்கள் ஒரே வகுப்பில் அமர்ந்து தமிழ் வழியில் நடத்தப்படும் பாடங்களை கற்கும் நிலை உள்ளது. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆங்கிலவழி கற்பித்தல் திறன் கொண்ட ஆசிரியர்களை தனியாக நியமிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு


ஜாக்டோ - ஜியோ சார்பில், நான்கு நாட்களாக நடந்த மறியல் போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், பிப்., 21 முதல், தொடர் மறியல் போராட்டம் நடந்தது. சென்னையில், சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன், தினமும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மறியல் நடத்தினர்.

அவர்களை போலீசார், காலையில் கைது செய்து, மாலையில் விடுவித்து வந்தனர்.நேற்று முன்தினம், பிரதமர் மோடி, சென்னையில் பங்கேற்ற அரசு விழா நடந்த இடம் அருகே, நான்காவது நாளாக போராட்டம் நடத்தினர். இதனால், போலீசார், அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, முதல்வருடன் பேச்சு நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.இதையடுத்து, நேற்று முன்தினத்துடன் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு முடிந்தபின், கோடை விடுமுறையில், மே, 8ல், கோட்டையை நோக்கி பேரணி செல்ல, ஜாக்டோ - ஜியோ முடிவு செய்துள்ளது. இதற்காக, மார்ச், 24ல் மாவட்ட வாரியாக, ஆயத்த பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

தேர்வு அறையில் மின் விசிறி கட்டாயம் : பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு


பொது தேர்வுக்கான, தேர்வு அறைகளில், மின்விசிறி மற்றும், கடிகாரம் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தில், மார்ச், 1ல், பிளஸ் 2; மார்ச், 7ல், பிளஸ் 1; மார்ச், 16ல், 10ம் வகுப்புக்கும், பொது தேர்வுகள் துவங்க உள்ளன.

தேர்வின் போது, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, தமிழகம் முழுவதும், 30 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், ஒரு லட்சம் ஆசிரியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும்படி, பள்ளிகளை தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

* உள்ளூர் மின் வாரிய அதிகாரிகளுடன் பேசி, அனைத்து தேர்வு மையங்களுக்கும், தடையில்லா மின் வசதி பெற வேண்டும் * அனைத்து தேர்வறைகளின் முன்புறமும், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஓட்டை, உடைசல் பெஞ்ச்கள் மற்றும் எழுத்து பலகைகளை மாற்றி, மாணவர்களுக்கு வசதியான பெஞ்ச்கள் மற்றும் எழுத்து பலகைகள் வைக்க வேண்டும் * தேர்வின் போது, மாணவர்களின் காலணிகள், உடைமைகளை வைக்க, தனி அறைகளை ஒதுக்க வேண்டும். * அனைத்து தேர்வறைகளிலும், இயங்கும் நிலையில், மின் விசிறி மற்றும் சுவர் கடிகாரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து


தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், பொது தேர்வுக்கான, 'ப்ளூ பிரிண்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 13 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. கல்வியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையிலான, கலைத்திட்டக்குழு, புதிய பாடத்திட்டத்தை தயாரித்துள்ளது. முதற்கட்டமாக, வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணி, ஒரு வாரத்திற்கு முன் துவங்கின. புதிய பாடத்திட்டத்தை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையாக, பேராசிரியர் குழுவினர் தயாரித்துள்ளனர்.

மாணவர்கள், மனப்பாட கல்வியை கைவிட்டு, பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்; நுழைவு தேர்வை பயமின்றி எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்காக, பழைய பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அமலில் இருந்த, 'ப்ளூ பிரிண்ட்' முறை, புதிய பாடத்திட்டத்தில், ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சிந்தனைத்திறனை சோதிக்கும் வினா வகைகள், மாணவர்களது புரிந்து கொள்ளும் திறனை அதிகரிக்கும் வகையிலான அம்சங்கள், புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, February 24, 2018

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை


தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித் திட்டத்திற்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாததால் மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், 2013ம் ஆண்டு ஆங்கிலவழி செயல்வழிக்கற்றல் திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 10 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பாடத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்ததால், மாணவர் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. ஆனால் இதற்கென தனியாக ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை. பள்ளிகளில் பிற வகுப்பெடுக்கும் தமிழ்வழி கல்வி கற்கும் மாணவர்களின் ஆசிரியர்களே ஆங்கில வகுப்பும் எடுத்தனர். கடந்த 2013ம் ஆண்டில் ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் இந்த கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு வந்துவிட்டனர்.

இதுபோல் மற்ற கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகள் வந்துவிட்டனர். ஆனால் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க போதிய ஆசிரியர்கள் மட்டும் இல்லை.சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘கூடுதல் பணிச்சுமையால், ஆசிரியர்கள் தமிழ்வழி கல்வி வகுப்பறையிலேயே, ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கும் பாடங்களை கற்பித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் ஆங்கிலவழி கல்வி பாடங்களை கற்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி என்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது,’’ என்றார்.

அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்: பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல்


தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்க (ஜேஆர்சி) அமைப்பு கட்டாயமாகச் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் வலியுறுத்தினார். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் "ஜுனியர் ரெட்கிராஸ்' அமைப்பின் கல்வி மாவட்ட அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்களுக்கான மாநில மாநாடு சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளை தலைவர் ஹரீஸ் எல்.மேத்தா தலைமை வகித்தார். மாநாட்டை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் தொடங்கி வைத்துப் பேசியது:- சமூகத்தைப் பாதுகாக்கவும், பிறருக்கு உதவும் நோக்கம் வேண்டும் என்ற கொள்கையோடும் செயல்பட்டு வருகிறது இளஞ்செஞ்சிலுவை சங்கம். மாணவர்களை நல்வழிபடுத்துவதில் இந்தச் சங்கத்தின் பணி அளப்பரியது. ஆசிரியர்கள் இதில் முக்கிய பொறுப்பேற்று செயல்பட வேண்டும். பள்ளிகளில் செயல்பட்டு வரும் ஜேஆர்சி அமைப்பு மாணவர்களுக்கு முறையாகப் பயிற்சி அளிக்க வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் இந்த அமைப்பை கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கல்வி இணைச் செயல்பாடுகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் ஜே.ஆர்.சி. அமைப்பை தொடங்குவது குறித்து தொடர்புடைய கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார்

Friday, February 23, 2018

பிளஸ் 1 வகுப்பு அகமதிப்பீடு: திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு


பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் குறித்த திருத்தப்பட்ட அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இம்மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவது குறித்து ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டது. அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் திருத்தங்கள்படி, மாணவர் வருகைப் பதிவேடு, கல்வி இணைச் செயல்பாடுகள் போன்றவற்றில் வழங்கப்பட்டு வந்த அதிக மதிப்பெண்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: அகமதிப்பீட்டுக்கு தொழிற்கல்வி செய்முறை தவிர்த்து 10 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்: மாணவர் வருகைப் பதிவேடு - 2 மதிப்பெண்கள்; 80 சதவீதத்துக்கு மேல் வருகைக்கு 2 மதிப்பெண்கள், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை 1மதிப்பெண் வழங்கப்படும். உள்நிலைத் தேர்வுகள் - 4 மதிப்பெண்; சிறந்த ஏதேனும் மூன்று தேர்வுகளின் சராசரி மதிப்பெண் நான்கு மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.

ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம் - 2 மதிப்பெண்; இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடலாம். அவற்றுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். கல்வி இணைச் செயல்பாடுகள் -2 மதிப்பெண்; மரம் வளர்த்தல், இலக்கிய மன்றம், தேசிய மாணவர் படை, விளையாட்டுச் செயல்பாடுகள் என ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் 33 செயல்பாடுகளில் ஏதேனும் மூன்று செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளதை கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்கலாம். தொழிற்கல்வி செய்முறை பாடத்துக்கான அக மதிப்பீடு: மொத்தம் 25 மதிப்பெண்கள் மாணவர் வருகைப் பதிவு - 5 மதிப்பெண்கள்; 80 சதவீதத்துக்கு மேல் வருகை- 5 மதிப்பெண்கள்; 75 முதல் 80 சதவீதம் வரை- 3 மதிப்பெண்கள். உள்நிலைத் தேர்வுகள்- 10 மதிப்பெண்கள்; சிறந்த ஏதேனும் மூன்று தேர்வுகளின் சராசரி மதிப்பெண் 10 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.

ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம்- 5 மதிப்பெண்கள்; இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடலாம். அவற்றுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். கல்வி இணைச் செயல்பாடுகள்- 5 மதிப்பெண்கள்; ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து ஏதேனும் மூன்று மட்டும். அவற்றுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.