இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, December 31, 2018

TNPSC annual.planner

http://www.tnpsc.gov.in/annual-planner.html

தொலைநிலைப் படிப்புகளை எந்தெந்த பல்கலைக்கழகங்கள் வழங்க முடியும்? யுஜிசி அறிவிப்பு


2019-ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் எந்தெந்த பல்கலைக்கழகங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற விவரத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. இந்த விவரங்கள் யுஜிசியின் இணையதளத்தில் (www.ugc.ac. in/deb) வெளியிடப்பட்டுள்ளன. தொலைநிலைப் படிப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னர், உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டுதலை யுஜிசி நடைமுறைப்படுத்தியது.

இதனால் குறிப்பிட்ட "நாக்' தரப் புள்ளிகளைப் பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி, 2018-2019-ஆம் கல்வியாண்டில் தமிழகத்திலுள்ள 5 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற நிலை உருவானது. இதுபோன்று, 2019-2020 கல்வியாண்டில் நாடு முழுவதும் எந்தெந்த கல்வி நிறுவனங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற அறிவிப்பை யுஜிசி இப்போது வெளியிட்டுள்ளது.

இதில், கடந்த ஆண்டில் தகுதி பெற்றிருந்த அந்த 5 தமிழக பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2019-ஆம் ஆண்டிலும் தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றன. அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகம் 30 தொலைநிலைப் படிப்புகளையும், அண்ணா பல்கலைக்கழகம் 3 தொலைநிலைப் படிப்புகளையும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 73 படிப்புகளையும், தமிழ் பல்கலைக்கழகம் எம்.பி.ஏ., பி.எட். உள்ளிட்ட 16 படிப்புகளையும், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் பி.காம்., பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. ஊடகவியல் மற்றும் தகவல்தொடர்பு, பிபிஏ, எம்.ஏ. ஆங்கிலம் ஆகிய 5 படிப்புகளையும் வழங்கத் தகுதி பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-இல் நடைபெறும் போட்டித் தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், வரும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் எத்தனை போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன என்பது குறித்த பட்டியலை அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இந்தப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான (2019) உத்தேச தேர்வுக்கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் நலன் கருதி பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தங்களை தயார் செய்து கொள்ள வசதியாக இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிரதான தேர்வுகளாகக் கருதப்படும் குரூப்-1 தேர்வுக்கான அறிவிக்கை ஜனவரியிலும், குரூப்- 2 தேர்வுக்கான அறிவிக்கை மே மாதத்திலும், லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் குரூப்- 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான அறிவிப்பு ஜூனிலும் வெளியிடப்பட உள்ளன. குறைந்த அளவிலான தேர்வர்கள் பங்கேற்கக் கூடிய தேர்வுகளின் அறிவிக்கைகள் வெளியிடப்படக் கூடிய மாதங்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வுக்கான அட்டவணைப் பட்டியலை தேர்வாணைய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 2016-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 17 அறிவிக்கைகள் மூலம், அனைத்து 17 தேர்வுகளும் நடத்தப்பட்டு 6 ஆயிரத்து 383 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 2017-ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 8 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 22 அறிவிக்கைகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. 2018-ஆம் ஆண்டில் 23 பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிட உத்தேசிக்கப்பட்டு அதில் 15 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. அத்துடன் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்படாத 16 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மொத்தம் 15 பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், 16 பதவிகளுக்கான தேர்வுகள் வரும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படவுள்ளன. இவற்றின் மூலம் 4,365 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

புத்தாண்டில் 16 வகை தேர்வு; 4,365 இடங்களுக்கு நியமனம்


அரசு துறைகளில் 4,365 காலியிடங்களை நிரப்பும் வகையில் 16 வகை தேர்வுகள் இந்த புதிய ஆண்டில் நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யின் சார்பில் வருடாந்திர தேர்வு அட்டவணையை, செயலர் நந்தகுமார் நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2016ல் 17 தேர்வுகள் நடத்தப்பட்டு 6,383 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன; 2017ல் 15 ஆயிரத்து எட்டு காலியிடங்களுக்கு 22 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன; இன்னும் இரண்டு தேர்வுகள் நடத்த வேண்டியுள்ளது. அதேபோல் 2018ல் 15 தேர்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்த புதிய ஆண்டில் 4,365 காலியிடங்களை நிரப்ப 16 வகை போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

கால அட்டவணையில் குறிப்பிடும் காலங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, December 28, 2018

எல்.கே.ஜி., பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப்பு


மாணவர்கள் குறைவாக உள்ள, 3,133 அரசு பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 37 ஆயிரத்து, 358 பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2,947 மேல்நிலை; 3,118 உயர்நிலை; 31 ஆயிரத்து, 293 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது.

மாநில அளவில், 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில், தலா, 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். பல பள்ளிகளில், மாணவர்களே இல்லாத நிலையும் உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித் தரத்தை உயர்த்தவும், செலவுகளை குறைக்கவும், பள்ளிகளை இணைக்க, கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக, 3,133 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில், தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் அடங்கும். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள, தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை ஒன்றாக இணைத்து, ஒரே வளாகத்தில் செயல்பட, ஏற்பாடு செய்யப்பட உள்ளது.இந்த இணைப்பின் வாயிலாக, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, ஒரே பள்ளியில் படிக்க முடியும். எனவே, எல்.கே.ஜி.,யில் மாணவர்கள் சேர்ந்தால், பிளஸ் 2 வரை, வேறு பள்ளிக்கு மாற வேண்டியதில்லை. இதற்கான முயற்சியாக, மாவட்ட அளவில், இதுபோன்ற மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. அவற்றின் செயல் திறன் அடிப்படையில், இணைப்பு நடவடிக்கை தொடரும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆரம்ப பள்ளிகளை இணைக்க அரசு முடிவு


அரசு ஆரம்ப பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கையை அனுப்பும் என்றும், அரசு ஆரம்ப பள்ளிகள் எதுவும் இனி தனித்து இயங்காது எனவும், மேலும் வரும் கல்வி ஆண்டில் அனைத்து ஆரம்ப பள்ளிகளும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Thursday, December 27, 2018

பிளஸ் 2 பொதுத்தேர்வு: முக்கிய பாடங்களுக்கு நேரம் குறைப்பு


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொழிப்பாடங்கள் தவிர்த்து முக்கிய பாடங்களுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கு கடந்த ஆண்டு முதல் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டது. மேலும் பொதுத் தேர்வு மொத்த மதிப்பெண் 1,200-லிருந்து 600 ஆகக் குறைக்கப்பட்டது.

இதுதவிர மேல்நிலை வகுப்புகளில் மொழிப்பாடங்கள் முதல்தாள், இரண்டாம்தாள் என்ற முறைக்கு பதிலாக ஒரே தாளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்கு மொழிப்பாடங்கள் தவிர்த்து முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளுக்கு தேர்வெழுதும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வின் போது மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு நேரம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது, மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கு தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.45 மணியளவில் முடிவடையும். புதிய அறிவிப்பின்படி இந்த பொதுத்தேர்வில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், உயிரியல், வரலாறு, இயற்பியல். வணிகக் கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் மாதிரி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி


அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜனவரி முதல், தினமும் மாதிரி தேர்வு நடத்தி, பொது தேர்வுக்கு தயார்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொது தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் 1ல், பொது தேர்வுகள் துவங்க உள்ளன. 25 சதவீதம்தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பாடங்கள் முடிக்கப்பட்டு, பாடங்களின் திருப்புதல் நடந்து வருகிறது.

அரசு பள்ளிகளில், 25 சதவீத பாடங்கள் மட்டும் பாக்கி உள்ளன. புத்தாண்டு விடுமுறை முடிந்து, வரும், 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து, பொது தேர்வு மாணவர்களுக்கு, தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தி, சிறப்பு பயிற்சி அளிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர்.ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பாடத்திலும், சில பகுதிகளுக்கு தேர்வு வைத்து, அவற்றை உடனே திருத்தி, மாணவர்களின் மதிப்பெண்ணை தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில், மாணவர்கள் கூடுதல் நேரம் படித்து, சிறப்பு பயிற்சி பெற முடியும்.

வார விடுமுறைஇந்த திட்டங்களை, தலைமை ஆசிரியர்கள், தாமாகவே முன்வந்து அமல்படுத்த வேண்டும். மேலும், வார விடுமுறை நாட்களிலும், காலை மற்றும் மாலை வேளைகளிலும் கூடுதல் வகுப்புகள் நடத்தி, மாணவர்களை தயார் செய்ய ஆலோசனை தரப்பட்டு உள்ளது. பொது தேர்வில், வெறும் தேர்ச்சி என்ற இலக்கை தாண்டி, அதிக மதிப்பெண் பெறவும் மாணவர்களை தயார் செய்ய, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Wednesday, December 26, 2018

பள்ளிகளில் ஆதார் எண் கட்டாயமில்லை உத்தரவை திருத்த கல்வி துறை முடிவு


பள்ளி மாணவர்களிடம், ஆதார் எண் பெறுவது கட்டாயம் என்ற உத்தரவு, மாற்றப்பட உள்ளது. ஆதார் ஆணைய உத்தரவின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.நாடு முழுவதும், பல்வேறு துறைகளில், பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடம், ஆதார் எண்கள் கேட்கப்படுகின்றன.மத்திய - மாநில அரசின் திட்டங்களில் முறைகேட்டை தடுக்க, ஆதார் எண்களை பெற்று, அதன்படி பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.மேலும், வங்கிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளும், ஆதார் எண்களை சேகரித்து வருகின்றன.இதனால், ஆதார் எண்கள் பல இடங்களில் கசிந்து, தனிநபர் பாதுகாப்புக்கு சிக்கல்ஏற்படுகிறது.

இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டும், ஆதார் எண்ணை சேகரிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.அதனால், மத்திய அரசின், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுகளுக்கு, மாணவர்களின் ஆதார் எண் கட்டாயமில்லை என, அறிவிக்கப்பட்டது.ஆனால், பள்ளி களில் மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு பணிகள் நடக்கும் நிலையில், ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இதுதொடர்பாக, ஆதார் ஆணையத்துக்கு, பெற்றோர் புகார் அனுப்பினர்.புகாரை விசாரித்த ஆதார் ஆணையம், பள்ளிகள், கல்லுாரிகள், மாணவர்களிடம் ஆதார் எண்ணை கேட்டு, கட்டாயப்படுத்த கூடாது என, உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழக பள்ளி களிலும், ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவு மாற்றப்பட உள்ளது. தமிழக பள்ளி கல்வியில், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் சார்பில், ஆதார் எண் பெறப்படுகிறது.'அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச நல திட்டங்கள் அமல்படுத்துவதால், அதற்கு மட்டும் ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கலாம்.

'மற்ற தனியார் பள்ளி மாணவர்களுக்கு, விருப்பப்பட்டால் மட்டுமே, ஆதார் எண்ணை வழங்கலாம்' என, திருத்தம் செய்யப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, December 25, 2018

சத்துணவு மையம் மூடும் திட்டமில்லை


25 குழந்தைகளுக்கு கீழ் பயிலும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை மூடுவதற்கான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடுமாறு சமூக நலத்துறையிடம் இருந்து அரசாணை வெளியானது. மாணவர்களுக்கு அருகில் உள்ள சத்துணவு மையங்களில் இருந்து உணவு சமைத்து தரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் சத்துணவு மையங்கள் மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சமூக நலத்துறை, சத்துணவு மையங்களில் உள்ளி காலிப் பணியிடங்களை சரி செய்யவே இந்த ஆணை பிறபிக்கப்பட்டுள்ளதாகவும், சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் தமிழக அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Sunday, December 23, 2018

ஆசிரியர் விபரங்களை டிஜிட்டலில் பதிய உத்தரவு


ஆசிரியர்களின் பணி விபரங்களை, டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்த உதவிகளை பெற, பல பள்ளிகளில், போலியாக கூடுதல் மாணவர் களின் எண்ணிக்கையை காட்டுகின்றனர்.அதேபோல, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் பணியிடங்களை தக்க வைப்பதற்காக, மாணவர்கள் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரித்து காட்டுகின்றனர்.இதனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளுக்கும், அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.இந்த பிரச்னைகளை தீர்க்க, அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களின் விபரங்களை, டிஜிட்டலில் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், மாணவர்களின் பெயர், பெற்றோர்கள் பெயர், முகவரி, ரத்தப்பிரிவு, மொபைல் போன் எண், படிக்கும் வகுப்பு மற்றும் பள்ளியின் விபரங்கள் பதிவு செய்யப்படும்.மாணவர்கள், ஆண்டுதோறும் வகுப்புகள் மற்றும் பள்ளிகள் மாறும் போதும், விபரங்கள் புதுப்பிக்கப்படும். இதனால், போலி மாணவர்கள்எண்ணிக்கை குறைந்துஉள்ளது.இந்நிலையில், ஆசிரியர் களின் விபரங்களையும், டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுஉள்ளார்.

வருங்காலங்களில், ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள், ஓய்வு பெறும் ஆசிரியர்கள் விபரம் போன்றவற்றை, துல்லியமாக தெரிந்து கொள்ள, டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும்.மேலும், ஆசிரியர்கள் இடம்மாறும் போது, புதிய பணியிடத்தை குறிப்பிட்டு, டிஜிட்டல் விபரங்களை புதுப்பிக்க வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விபரங்கள் அனைத்தையும், பள்ளி கல்வித்துறையின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்ற, 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்ய, அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.இந்த விபரங்கள் அடிப்படையில், ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆன்லைனில் குழப்பமின்றி நடத்த முடியும் என்றும் கூறப்பட்டு உள்ளது

Friday, December 21, 2018

கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர் மறு நியமனத்துக்கு கட்டுப்பாடுகள்


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்குவதற்கான் கட்டுப்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை:

மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், 2019-2020-ஆம் கல்வி ஆண்டில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்குவதற்கு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.

கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது ஆசிரியரின்றி மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அந்த ஆசிரியரின் பண்பு, நடத்தை திருப்தியாக இருந்தாலும், தொடர்ந்து பணிபுரியும் வகையில் உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். உபரி ஆசிரியர் பணியிடங்கள்:

உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தால் பணி நிறைவு செய்தவர்களை மறு நியமனம் செய்யக்கூடாது. மாணவர்களின் நலன் கருதி உபரி பணியிடம் அல்லாத ஆசிரியர்களை மறுநிர்ணயம் செய்யும் போது, கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மறுநியமனம் வழங்கப்படும். உபரி பணியிடம் அல்லாத ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் பெற்ற ஊதியத்தையே மறு நியமன ஊதியமாக வழங்க வேண்டும். உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தயார் செய்யப்பட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூட்டு மேலாண்மையில் இயங்கினால் அந்த நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு கூடுதலாக உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்யவேண்டும்.

இந்த உபரி பணியிடங்களை மாற்றம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணி நிரவல் செய்யப்படும் ஆசிரியர் அடுத்த கல்வியாண்டு தொடங்கும் போதோ அல்லது அதற்கு முன்னரோ பணியில் சேர வேண்டும். வேறு பள்ளிக்குச் செல்ல மறுத்தால்... அரசு உதவி பெறும் பள்ளிகளில் மானியம் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் உபரியாக கண்டறியப்பட்ட ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய அந்தப் பள்ளி நிர்வாகம் மறுத்தால் அந்தப் பள்ளியின் மானியத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உபரியாகக் கண்டறியப்பட்ட ஆசிரியர் பணியிடத்துடன் பணிநிரவல் செய்து, தேவையுள்ள பள்ளிக்கு மாறுதல் அளித்து, பணியில் இருந்து விடுவிக்கப்பட்டபின், அந்த ஆசிரியர் பணி நிரவல் செய்த பள்ளிக்கு மாறுதலில் செல்ல மறுத்தால், அவ்வாறு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து உபரியாகப் பணிபுரிந்த நாள்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட வேண்டும்.

🔥🔥 *Flash News SUPER ANNUATION GO 261 .Date 20.12.2018*





Thursday, December 20, 2018

சென்னை புத்தக கண்காட்சி 2019

கே.என்.சிவராமன்
குங்குமம் இதழின் ஆசிரியர்

#சென்னைபுத்தககண்காட்சி2019-II

சரி... இன்றைய வாழ்வியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் எப்படி புத்தகங்களை படிக்கலாம்..?

* அலுவல் வேலை அதிகம். அதை முடித்துவிட்டு அக்கடா என சோர்வுடன் வீட்டுக்குச் சென்றதும் அழுத்தமான உள்ளடக்கம் கொண்ட நூல்களை வாசிக்க ஆரம்பித்தால் அதிகபட்சம் இரண்டு, மூன்று பக்கங்களுக்கு மேல் அல்லது இரண்டு மூன்று பத்திகளுக்கு மேல் நம்மால் படிக்க முடியாமல் போகும். சோர்வு தலைதூக்கி கண்கள் தூக்கத்துக்கு கெஞ்ச ஆரம்பிக்கும்.

ஸோ, இதுமாதிரியான நேரங்களில் லைட்டர் ரீடிங்குக்கு மாறுவது நல்லது. இந்த லைட்டரையே நமக்கு விருப்பமான, நம் துறை சார்ந்த நூல்களாக தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.

உதாரணத்துக்கு சினிமா தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டு என்றால்... வெங்கடேஷ் சக்கரவர்த்தி, ராஜன் குறை, யமுனா ராஜேந்திரன், பிரேம்... ஆகியோர் எழுதிய நூல்களையோ அல்லது உலகப் புகழ்பெற்ற சினிமா கலைஞர்களின் தமிழாக்கம் செய்யப்பட்ட பேட்டிகள் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களையோ கையில் எடுக்காமல் சினிமா பத்திரிகையாளர்கள் அல்லது ஏவி.எம்.சரவணன், ஆரூர்தாஸ் எழுதிய புத்தகங்களையோ; தொகுக்கப்பட்ட ரா.கி.ரங்கராஜனின் ‘லைட்ஸ் ஆன்’, இயக்குநர் ஸ்ரீதர் - ஏ.வெங்கடேஷ் - சமுத்திரகனி - பாலா - சேரன்.... ஆகியோரின் தன் வரலாற்று நூல்களையோ எடுத்துப் படிக்கலாம். மெல்ல மெல்ல அலுவல் அழுத்தம் குறையும். மறையும்.

இதன் பிறகும் அரை மணிநேரம் படிக்க முடியும் என்றால் அழுத்தமான சினிமா நூல்களை எடுத்துப் படிக்கலாம்.

* அரசியல் சார்ந்த நூல்களில் ஆர்வம் என்றால்... முதலில் ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகங்களையோ தமிழாக்கங்களையோ படிக்காமல் எந்த சித்தாந்தத்தில் நமக்கு ஆர்வமும் விருப்பமும் நம்பிக்கையும் இருக்கிறதோ அந்த சித்தாந்தம் குறித்து நம் ஆட்கள் எழுதிய அறிமுக நூல்களை படிக்கத் தொடங்குவோம்.

இதன் மூலம் அடிப்படைகள் நமக்கு புரிபடும்.  பிறகு ஆய்வு புத்தகங்களை படிக்க ஆரம்பித்தால் ஓரளவு சரடு வசப்படும்.

இதற்குள் இன்னொரு காரியத்தையும் செய்வது நல்லது. அது எதிர் தரப்பினரின் நூல்களைப் படிப்பது. எடுத்துக்காட்டுக்கு மார்க்சியம். கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறது என்றால்... அதன் அடிப்படைகளை அறிந்தபின் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கம்யூனிச நூலைப் படிப்பது நல்லது.

இதைப் படிக்கும்போது ‘உண்மைதானோ...’ என்ற கேள்வி நமக்குள் எழுந்தால்... மார்க்சிய சித்தாந்த அடிப்படைகளை குறைபாடாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். உடனே அந்நூலில் அரவிந்தன் நீலகண்டன் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கான பதிலைத் தேடித் தேடி படிப்பது நம்மை நாமே செழுமைப்படுத்திக் கொள்ள உதவும்.

கேள்விகளைப் போலவே பதில்களை கண்டறிவதும் அவசியம்; முக்கியம்.

இது தலித்தியம், திராவிட இயக்கங்கள், மதவாத பிரதிகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள்... என சகலத்துக்கும் பொருந்தும்.

எதிர் தரப்பால் நாம் விரும்பும் சித்தாந்தங்கள் குறித்து எழுதப்பட்ட நூல்களை படிக்கும்போதுதான்... அதற்கான பதில்களை கண்டறியும்போதுதான்... தெளிவு பெறுவோம்.

* இட ஒதுக்கீடு, காவிரி / முல்லைப்பெரியாறு, கூடங்குளம்... என issue based ஆக படிக்கப் போகிறோம் என்றாலும் இப்படித்தான். பத்திரிகையாளர்கள் எழுதிய நூல்களை படித்துவிட்டு வரலாற்று ஆய்வுடன் எழுதப்பட்ட issue based புத்தகங்களை படிப்பது நல்லது.

திரும்பத் திரும்ப எல்லாவற்றுக்கும் பத்திரிகையாளர்கள் எழுதிய நூல்களை குறிப்பிடக் காரணம்... அவை நுனிப்புல் மேய்ந்ததாக இருந்தாலும் அடிப்படைகளை புரிய வைத்துவிடும். நீளமான வாக்கியங்களாக இருக்காது. ஓரளவு சரளமான நடையாக இருக்கும். முக்கியமாக நமக்கு அறிமுகமான சொற்களையே பயன்படுத்தியிருப்பார்கள். எனவே ஆராய்ச்சி நூல்களை படிப்பதற்கான வார்ம் அப் ஆக இவை இருக்கும்.

* சிறுகதைகள்... நாவல்கள் படிக்கப் போகிறோம் என்றால்... அதற்கும் நம்மை விரல் பிடித்து அழைத்துச் செல்லும் வழிகாட்டிகள் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு வண்ணதாசன்.

எப்படிப்பட்ட மன அழுத்தத்துடன் நாம் இருந்தாலும் அவரது ஒரு சிறுகதை நம்மை அணைத்து ஆறுதல் படுத்திவிடும். அதன் பிறகு இன்னொரு கதை. இதற்குள் திக்குத் தெரியாமல் தவித்த நம்மை ஆற்றுப்படுத்தியிருப்பார். இதன் பிறகு அதிக கவனத்தைக் கோரும் நாவல்களை எடுத்துப் படிக்கத் தொடங்கலாம்.

* எல்லோரது வாழ்க்கையையும் சில நூல்கள் மாற்றியிருக்கும்; உத்வேகத்தை அளித்திருக்கும்; கனவுகளை விரித்திருக்கும். அப்படிப்பட்ட புத்தகங்களை எப்போதும் நம் படுக்கைக்கு பக்கத்தில் வைத்திருப்பது நல்லது. ஏனெனில் இந்தப் புத்தகங்களே இழந்துவிட்டதாக நாம் நினைக்கும் உணர்வுகளை மீண்டும் மீட்க உதவும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், திரும்பத் திரும்ப சாண்டில்யனின் நாவல்களைப் படித்ததும்; மார்க்வெஸ் ‘கவுண்ட் ஆஃப் மாண்டோ கிறிஸ்டோ’வை தனக்குத் தோன்றும்போதெல்லாம் வாசித்ததும் இதனால்தான்.

உண்மையில் இப்படிப்பட்ட புத்தகங்களை நாம் படிப்பதில்லை; மாறாக, நமக்குள் நாம் பயணப்பட்டு மறைந்திருக்கும் நம் கனவுகளை, உத்வேகத்தை வெளியில் கொண்டு வருகிறோம். அவ்வளவுதான்.

* வேலைகளுக்கு மத்தியில் சமூக வலைத்தளங்களை நம்மால் அவ்வப்போது பார்க்க முடியும் என்றால்... தினமும் ஒரு சிறுகதை அல்லது ஓரு கட்டுரையை படிக்கலாம்.

இலக்கியம், ஓவியம், கலைகளில்தான் விருப்பம் என்றால் எம்.டி.முத்துக்குமாரசாமி, வாசுதேவன்... போன்றோர் அவ்வப்போது ஷேர் செய்யும் ஆங்கிலக் கட்டுரைகளை, நிலைத்தகவல்களாக அவர்கள் எழுதும் குறிப்புகளை ஒரு பார்வை பார்க்கலாம்.

இன்றைய மார்க்சியப் போக்குகள் குறித்து அறிய விரும்பினால் யமுனா ராஜேந்திரனின் முகநூல் பக்கத்தை எட்டிப் பார்க்கலாம். குறிப்புகள், அறிமுகங்கள்... என நமக்குக் கிடைக்கும்.

உதாரணத்துக்கு சொல்லப்பட்ட பெயர்கள் இவை. இன்னும் எண்ணற்றவர்கள் அந்தந்த துறைகள் சார்ந்து பல லிங்குகளை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து நமக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

* அலுவலகத்துக்கு டூ வீலர் அல்லது பேருந்து அல்லது மின்சார ரயிலில் பயணம் செய்கிறோம் என்றால்... ஆடியோ ஃபைல்ஸ் உதவும். வாய்ஸ் மெசேஜில் நாமே ஒரு சிறுகதை அல்லது ஒரு கட்டுரை அல்லது கவிதைகளை ரிக்கார்ட் செய்துவிட்டு பயணங்களின்போது அதைக் கேட்கலாம்.

ஒருவேளை அமர்ந்து செல்லும் வகையில் நம் பயணம் அமையும் என்றால் பர்ஸ், செல்போனை விட நூல்களை எடுத்துச் செல்வது முக்கியம். அதே. வார்ம் அப் புத்தகங்கள்தான். ஆய்வு நூல்கள் அல்ல.

* எந்த படைப்பையாவது / எந்த எழுத்தாளரின் தொகுப்புகளையாவது / எந்த சித்தாந்த கோட்பாட்டு நூல்களையாவது யாராவது முழுமையாக அல்லது நம்மை விட அதிகமாக படித்திருப்பார்கள். அவர்களுடன் போனில் பேசலாம் அல்லது நேரில் சென்று உரையாடலாம்.

* ஒருபோதும் படிக்க நேரமில்லை என்று சொல்லாமல் இருப்போம். நாளைக் காலை கடன் தொகையை அல்லது இஎம்ஐ-யை செலுத்த வேண்டுமென்றால் இன்று எத்தனைப் பேரை தொடர்பு கொண்டு உதவி கேட்கிறோம்... நேரில் சந்திக்கிறோம்..? இதற்கெல்லாம் எங்கிருந்து நேரம் கிடைக்கிறது..? அப்படித்தான் வாசிப்புக்காவும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

இன்று லேண்ட் லைனில் யாரும் அமர்ந்து பேசுவதில்லை. நடந்துக் கொண்டே அல்லது பயணம் செய்து கொண்டே கைபேசியில் உரையாடுகிறோம். அதாவது காலத்துக்கு ஏற்ப நாம் மாறியிருக்கிறோம்.

இது வாசிப்புக்கும் பொருந்தும். டேபிள் அல்லது சோஃபாவில் அமர்ந்து; படுக்கையில் படுத்தபடி... என்றுதான் என்னால் படிக்க முடியும் என்று சொல்ல வேண்டாம். மாறாக நம் வாழ்க்கைச் சூழலுக்கு தகுந்தபடி படிக்கும் பழக்கத்தையும் மாற்றிக் கொள்வோம். குளிர் பிரதேசங்களில் ஸ்வெட்டரும் வெப்ப பிரதேசத்தில் பனியனுடன் சுற்றுவது போல்.

வீட்டுக்கு எப்படி அத்தியாவசியப் பொருட்கள் அவசியமோ அப்படி நூலகமும் தேவை. புத்தகங்கள் இல்லா வீடு சடலங்களின் இருப்பிடம். செல்போன், டிவி, சமையல் பாத்திரங்கள்... எல்லாம் வாங்க எப்படி நம் பொருளாதார நிலைக்குத் தகுந்தபடி முற்படுகிறோமோ... ஐபோன் முடியாவிட்டாலும் சைனா செட்டாவது வாங்குகிறோம் அல்லவா..? அப்படி நமக்குத் தேவையான... நமக்கு விருப்பமான புத்தகங்களையும் வாங்க வேண்டும்.

அதுவும் செல்போனுக்கு மாதாமாதம் ரீசார்ஜ் செய்வதுபோல் மாதம்தோறும் குறைந்தது ரூபாய் ஐநூறுக்குள்ளாவது புத்தகம் அல்லது புத்தகங்களை வாங்க வேண்டும்.

அழுத்தமாக இதைக் குறிப்பிடக் காரணம் நாம் அனைவருமே முதல் அல்லது இரண்டாம் தலைமுறை பட்டதாரிகள். இந்த நிலைக்கு நாம் வந்திருப்பதற்குக் காரணம் படிப்புதான். அப்படியிருக்க அதைப் புறக்கணிப்பது நம் எதிர்காலத்தையே புதைக்குழியில் புதைப்பதற்கு சமமல்லவா..?

மறுக்கவேயில்லை. இப்போது நாம் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் படிப்பு நம்மைக் காப்பாற்றாது. ஆனால், இவை அனைத்தையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை, மனோதிடத்தை வாசிப்பு மட்டுமே கொடுக்கும்.

ஏனெனில் எழுத்தாளனை விட வாசகனே மேலானவர்கள். எழுத்தாளன் தன் கனவை மட்டும்தான் விதைக்கிறான். வாசகன் அதனுடன் தன் கனவையும் கலக்கிறான்.

‘சென்னை புத்தக கண்காட்சி 2019’ நம்மை அன்புடன் வரவேற்கிறது.