இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, August 31, 2017

10 கி.மீ தூரம் செல்வதை தவிர்க்க புது தேர்வு மையம் அமைக்க தேர்வுத்துறை உத்தரவு


தமிழக தேர்வுத்துறை சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் புதிய தேர்வு மையங்கள் கேட்கும் கருத்துருக்களை பள்ளிகள் மூலம் பெற்று தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு மையம் அமைப்பது இன்றியமையாதது என்று கருதப்படும் பள்ளிகளுக்கு மட்டும் திட்டவட்டமான கருத்துருக்களை அனுப்ப வேண்டும். புதியதாக அமைய உள்ள தேர்வு மையங்கள் செயல்படுவதற்கு தகுதி உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், போக்கு வரத்து வசதி குறைவாக இருந்து 10 கிமீ தூரத்துக்கு மேல் மாணவர்கள் பயணம் செய்து தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் புதிய தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் நீதி மன்ற உத்தரவு பெற்று செயல்படும் பள்ளிகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும். இந்த விவரங்கள் அடங்கிய பட்டியல்களை 15ம் தேதிக்குள் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.2,248 கோடி நிதி தேவை: ஜாவடேகரிடம் கே.ஏ. செங்கோட்டையன் வலியுறுத்தல்


தமிழக கல்வித் துறைக்கு மத்திய அரசு மூலம் வழங்கப்பட வேண்டிய ரூ.2,248 கோடியை விரைந்து அளிக்குமாறு அமைச்சர் ஜாவடேகரை நேரில் சந்தித்து மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார். அரசுப் பள்ளிகளில் தூய்மையைப் பேணுவதற்காக தேசிய அளவில் சிறந்த மாநிலங்களைத் தேர்வு செய்து விருது வழங்கும் விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தில்லி வந்தார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை அவர் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:

பள்ளிகளில் கழிப்பிட பராமரிப்பு, தூய்மையைப் பேணுதல் ஆகியவற்றில் இந்திய அளவில் தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது (இரண்டாமிடம்) தில்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளது. அந்த விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். மற்றபடி எந்த அரசியல் நோக்கத்திற்காகவும் தில்லி வரவில்லை. தமிழக கல்வித் துறைக்கான நிதியைப் பெறுவது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை சந்தித்துப் பேசினேன். அப்போது, தமிழக கல்வித் துறைக்கு மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய ரூ.2,248 கோடியை விரைந்து அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

அந்த நிதியை ஒதுக்க முயற்சி செய்வதாக அமைச்சர் கூறினார். நீட் தேர்வு: இனி வரும் காலங்களிலும் 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும். மேலும், 'நீட்' தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தேவையான நடவடிக்கைகள் பள்ளிக் கல்வித் துறை மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் நடத்தப்படும் 'நீட்' தேர்வு தொடர்பாக ஆராய்ந்து 54 ஆயிரம் கேள்விகளையும் அதற்கான விடைகளையும் மாணவர்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். எதிர்காலத்தில் மாணவர்கள் எத்தகைய தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் அவர்களைத் தயார்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என்றார் செங்கோட்டையன். பேட்டியின் போது பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உடனிருந்தார். நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு: முன்னதாக, மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 'இது அரசியல் ரீதியிலான சந்திப்பு அல்ல. நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் சந்தித்துப் பேசினேன். மற்றவர்கள் சந்திப்பு குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும்' என்றார் அவர்.

செட்டாப் பாக்ஸ்: புதிய திட்டம் இன்று தொடக்கம்


அரசு கேபிள் தொலைக்காட்சி சார்பில் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கும் புதிய திட்டம் வெள்ளிக்கிழமை (செப்.1) தொடங்கி வைக்கப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இந்தப் புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 70 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள், அரசு கேபிள் தொலைக்காட்சி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளன.

எல்காம் ஆங்கிலம், ஏரியல் கணிதம் 670 பள்ளிகளில் புதிய திட்டங்கள்


தமிழகம் முழுவதும், ௬௭௦ அரசு பள்ளிகளில், மத்திய அரசின், 'எல்காம் ஆங்கிலம், ஸ்டெம் அறிவியல்' ஆகிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் பள்ளிக்கல்வியில் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்துகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

இதன்படி, தமிழகத்தில், 670அரசு பள்ளிகளில், 'எல்காம் ஆங்கிலம், ஸ்டெம் அறிவியல், ஏரியல் கணிதம்' ஆகிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

● 'எல்காம் ஆங்கிலம்' திட்டத்தில், ஊரக பகுதி மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்
● 'ஸ்டெம் அறிவியல்' திட்டத்தில், அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை இணைத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படும்
● இந்த திட்டத்தால், மாணவர்கள் எளிதில், பார்முலாக்கள் என்ற சூத்திரங்களையும், சமன்பாடு என்ற, ஈக்வேஷன்களையும், கற்றுக்கொள்ள முடியும்
● ஏரியல் கணிதம் திட்டத்தில், மாணவர்களுக்கு குறைந்த நேரத்தில், அதிக கணித பாடங்களை தெரிந்து கொள்ளும் வகையில், மாணவர்களுக்கு புரியும் வகையில் கற்றுத் தரப்படும்
● இதில், கணிதத்தை விரும்பி, அதை ஆர்வமாக படிக்கும் முறையை மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். இந்த மூன்று திட்டங்களுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பொறுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காலாண்டு தேர்வு நடக்குமா? : மாணவர்கள் குழப்பம்


ஆசிரியர்கள், செப்., ௭ முதல், தொடர் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதால், காலாண்டு தேர்வு நடக்குமா என, மாணவர்கள் குழப்பமடைந்துஉள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் சார்பில், தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது; பழைய, 'பென்ஷன்' திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்துவது; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மாத ஊதியத்தை உயர்த்துவது என, பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், கோட்டை நோக்கி பேரணி மற்றும் வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்கள் நடந்தன. ஆனாலும், அரசு பேச்சு நடத்தாததால், வரும், ௭ முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், அரசு பள்ளி ஆசிரியர்களில், பெரும்பாலானோர் பள்ளிக்கு வர வாய்ப்பில்லை என்பதால், பள்ளிகள் திறந்திருந்தாலும், வகுப்புகள் நடக்காது. இந்நிலையில், வரும், 11 முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, காலாண்டு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன், ஆசிரியர்கள் போராட்டம் துவங்கு வதால், தேர்வுக்கான பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்க முடியாத நிலை உள்ளது. போராட்டம், 11ம் தேதிக்கு பின்னும் நீடித்தால், காலாண்டு தேர்வை திட்டமிட்டபடி நடத்த முடியாத சூழல் ஏற்படும். எனவே, தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மருத்துவ கலந்தாய்வு : 3,112 இடங்கள் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு ..!


மருத்துவ கலந்தாய்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 3 ஆயிரத்து 112 மாணவர்களுக்கு, இடமளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட 4ஆயிரத்து 546 இடங்களில், 3 ஆயிரத்து 112 இடங்கள் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 -ம் தேதி வரை நடந்த கலந்தாய்வில் தமிழ்நாட்டை சேர்ந்த, தமிழகத்தில் படித்த 4 ஆயிரத்து 90 மாணவர்கள், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 428 மாணவர்களுக்கு உரிய விதிகளின்படி மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வில் பிற மாநில மாணவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறு என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெற்று வருகிறது என்றும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு இட ஒதுக்கீட்டு முறையில் தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டால், சேர்க்கை ரத்து செய்து மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது


பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் என அறிவித்த மத்திய அரசு, பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் உத்தரவிட்டது. இதன் மூலம் போலி பான் கார்டுகள் எண்ணிக்கை பெருமளவும் குறையும் என்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்திருந்தார்.

மேலும், பான் கார்டுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், இதற்கான காலஅவகாசம் இன்றுடன் முடிவடைவதாகவும், இதன் பிறகு ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது

Wednesday, August 30, 2017

2016-17 நிதியாண்டில் ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.7965 கோடி செலவு - ரிசர்வ் வங்கி

முந்தைய நிதியாண்டில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட வகையில் 3,421 கோடி ரூபாய் செலவானது. இந்த நிதியாண்டில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 7,965 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
இந்த ஆண்டில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் செலவு மட்டும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை தவிர்த்து 200 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு உள்ளது.

கடந்தாண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று, புழக்கத்திலிருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். ஊழல், கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகள் இவற்றை ஒழிப்பதற்காக இந்த ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்
கடந்தாண்டு டிசம்பர் 2ஆம் தேதியன்று, மத்திய நிதி இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர் 1,716.5 கோடி எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகளும், 685.8 கோடி எண்ணிக்கையிலான ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் என 15.44 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்ததாக,ராஜ்யசபாவில் தெரிவித்திருந்தார்.
  

பழைய ரூபாய் நோட்டுக்கள்
2016-17 ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, 632.6 கோடி எண்ணிக்கையிலான 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பியுள்ளன. 8.9 கோடி எண்ணிக்கையிலான 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பவில்லை என அறிக்கையில் கூறப்ப்பட்டுள்ளது. அதவாது, 8,900 கோடி ரூபாய் திரும்பவில்லை

  

இரு மடங்கு செலவு
2016-17ஆம் நிதியாண்டில் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க 7,965 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் அதாவது 2015 -16வது நிதியாண்டில் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க 3,421 கோடி ரூபாய் மட்டுமே செலவு ஆகியுள்ளது
  

புதிய ரூபாய் நோட்டுக்கள்
புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைத் தவிர்த்து 50 ரூபாய் 200 ரூபாய் நோட்டுகளும் தற்போது அச்சடிக்கப்பட்டுள்ளதால், இதற்கான செலவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

  

பணம் அச்சடிக்க எவ்வளவு செலவு
பழைய 500 ரூபாய் நோட்டு ஒன்று அச்சடிக்க ரூ.3.09 காசு செலவானது. அதே செலவிலேயே புதிய 500 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறது. இதே போல் 1000 ரூபாய் நோட்டு ஒன்று அச்சடிக்க அரசுக்கு ரூ.3.54 செலவானது. அதே செலவில் தற்போது புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Application for duplicate licence apply form

மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர் அறிய நவீன தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் அட்டை


பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர் அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் அட்டை விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (ஆக.30) தொடங்கியது. இந்தக் கருத்தரங்குக்கு புதுதில்லியில் உள்ள தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. கருத்தரங்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்துப் பேசியது:-

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ள ஸ்மார்ட் அட்டையில் 'சிப்' ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இது அடையாள அட்டையாக மட்டுமின்றி பள்ளிக்கு வரும் மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கணினி பயிற்றுநர்கள் நியமனம்: தற்போது 6,029 பள்ளிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இதற்கான பயிற்றுநர்களை புதிதாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய பாடத் திட்டத்தை வடிவமைக்க ஏற்படுத்தப்பட்ட உயர்நிலைக் குழுவின் ஆலோசனையைப் பெற்ற பின்னர், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி அதன் பிறகு ஒரு மாத காலத்தில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள மையங்களிலேயே தேர்வெழுதும் வகையில் புதிதாக 412 இடங்களில் புதிய மையங்கள் அமைக்கப்படும். விடுமுறை நாளாக இருக்கும் சனிக்கிழமை மாணவர்களுக்கு 3 மணி நேரம் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் அடுத்த ஒரு மாதத்துக்குள் நிறைவேற்றப்படும்.

காலியாக உள்ள வகுப்பறைகள்... மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிரந்தர அலுவலகம் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலியாக உள்ள வகுப்பறையைக் கண்டறிந்து அங்கு அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோன்று முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வாகனங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம்: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாறிச் செல்லும் போது மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) வழங்கப்படும். ஆனால் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பதிவுத்தாள் ('ரெக்கார்டு ஷீட்') வழங்கப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து எங்களது கோரிக்கையை ஏற்று தற்போது அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து மாறிச் செல்லும் மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி? : பள்ளிக்கல்வி துறை விரைவில் முடிவு


தமிழகத்தில், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பிரதமராக, 1986ல் ராஜிவ் இருந்த போது, மத்திய அரசு சார்பில், ஜவஹர் நவோதயா வித்யாலயா திட்டம் துவங்கப்பட்டது. கடந்த, ௧௯௮௬ கல்வி கொள்கையின்படி, கிராமப்புற மக்களுக்கு சம உரிமை வழங்கும் வகையில், மாவட்டத்திற்கு, ஒரு நவோதயா பள்ளி திறக்கப்பட்டது.

நாடு முழுவதும் இடம் பெயரும் குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு, அனைத்து மாநிலங்களிலும், கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மாணவியருக்கு மூன்றில் ஒரு பங்கு; மாற்றுத்திறனாளி களுக்கு, மூன்று சதவீதம்; கிராமப்புற மாணவர்களுக்கு, ௭௫ சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு அனுமதி : தற்போது, நாடு முழுவதும், 598 நவோதயா பள்ளி கள் செயல்படுகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில், கூடுதலாக, 62 பள்ளிகளுக்கு, சமீபத்தில், மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. நவோதயா பள்ளிகள் துவக்க வேண்டும் என்றால், மாநில அரசு, 30 ஏக்கர் இடம் ஒதுக்கித் தர வேண்டும்.

அதில், கட்டடம் கட்டி, மத்திய அரசின் சார்பில், ஆண்டுக்கு, 200 ரூபாய் கல்வி கட்டணத்தில், விடுதி வசதியுடன் கூடிய, உண்டு உறைவிட பள்ளியாக, நவோதயா பள்ளிகள் செயல்படும். மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின்படி, நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. பல ஆண்டுகளாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், நவோதயா பள்ளி மாணவர்களே, நாட்டில் அதிக தேர்ச்சி பெறுகின்றனர். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி யுடன், அந்தந்த மாநில மொழியை கற்றுக் கொடுக்கும் மும்மொழி திட்டம், நவோதயா பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. 6 - 8ம் வகுப்பு வரை, மாநில மொழிகளில் பாடங்கள் நடத்தப்படும்.

கூடுதலாக, ஆங்கிலம், ஹிந்தி கற்றுத்தரப்படும். 9ம் வகுப்பு - பிளஸ் ௨ வரை, ஹிந்தி அல்லது ஆங்கில வழியில் பாடங்கள் நடத்தப்படும். இத்திட்டம் அறிமுகமான காலத்தில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களால், தமிழகத்தில், நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த கொள்கையை, தமிழக அரசு இன்னும் மாற்றாததால், நவோதயா பள்ளிகள் இல்லை. பெற்றோர் கோரிக்கை : தற்போது, தமிழகத்தில் தனியார் பள்ளிகளிலேயே ஹிந்தி பயிற்றுவிக்கப்படுவதால், நவோதயா பள்ளிகளையும் அனுமதிக்கலாம் என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கேற்ற வகையில், தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் துவக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க, உத்தரவிட வேண்டும் எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்த, நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இந்நிலையில், தமிழை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அனுமதி வழங்கப்பட்டால், தமிழக கிராமப்பற மாணவர்கள், தமிழ் ஆங்கிலம், ஹிந்தியுடன், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் தரமான கல்வி பெறலாம். மேலும், மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளில், தமிழக மாணவர்களின் தேர்ச்சி சதவீதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்


பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; மதிப்பெண் முறையும் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டுக்கான, பிளஸ் 2 தேர்வும் மாற்றப்பட உள்ளது.

அதனால், பழைய முறையில், தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனரகத்தின் கருத்துருவுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், வரும், மார்ச் பொது தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள், அக்டோபர் மாதம் நடைபெறும் துணைத் தேர்வு மற்றும் 2019 மார்ச்சில் நடக்கும் பொது தேர்வுகளில் பங்கேற்க முடியும். அதற்கு பிறகும் தேர்ச்சி பெறாவிட்டால், தேர்வில் பங்கேற்க முடியாது.

எனவே, தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், 2019 மார்ச்சுக்குள், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2வில், தனித் தேர்வர்களாக எழுத விரும்புவோர்; 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு பூர்த்தியானவர், இந்த ஆண்டு அக்டோபர் தேர்வில் பங்கேற்கலாம். 2016 மார்ச்சில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், 2018 வரை, தற்போதைய, 1,200 மதிப்பெண் முறைப்படி தனித்தேர்வராக, பிளஸ் 2 தேர்வு எழுதலாம் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.