இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, September 04, 2016

ஆசிரியர் தினம்-முதல்வர் வாழ்த்து செய்தி


ஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் என ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

‘‘புறத்தில் உள்ள வறுமையைக் காட்டிலும், அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது’’ என உரைத்து, அகத்தில் உள்ள வறுமையைப் போக்கும் உன்னதமான ஆசிரியர் பணியைத் தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, தமது அறிவுத் திறனால், சிந்தனை வளத்தால் உலகம் போற்றும் தத்துவ மேதையாக விளங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘கல்வி சிறந்த தமிழ்நாடு’’ என்ற பாரதியாரின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் தரமான கல்வி கிடைத்திட வேண்டுமென்ற நோக்கில் பள்ளிக் குழந்தைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்திடும் அதே வேளையில் ஆசிரியர் நலன் காக்கும் வகையிலும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 74,316 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது; ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் 6 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்பட்டது; மதுரை மற்றும் கோயம்புத்தூரில் ஆசிரியர் இல்லங்கள் அமைத்திட 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம்; ஆசிரியர் இடமாற்றலில் வெளிப்படையான கலந்தாய்வு என ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்விற்காக உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு ஆகியவற்றை போதிக்கும் ஆசிரியப் பெருமக்களின் பணியினை பாராட்டி ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக தற்போது வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன். சிறந்த கல்விப் பணி ஆற்றி நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அழிவில்லா கல்வி செல்வத்தை தேசத்தின் வருங்கால தூண்களாம் மாணவச் செல்வங்களுக்கு புகட்டி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் அரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியப் பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் என வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை ஆசிரியர் தின நல் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment