இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, March 31, 2016

IGNOU- Revaluation Dec 2015 Results Published

Click below

https://studentservices.ignou.ac.in/RE_Result/RevalDec15/revaldec15.asp

ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதியில் தேர்தல் பயிற்சி வகுப்பு தொடக்கம்


தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் நாளை நிறைவு பெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வரும் நிலையில் முக்கிய பாடங்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. இதனை போன்று பத்தாம் வகுப்புக்கு மார்ச் 29ம் தேதி மொழி பாடத்தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஏப்ரல் 11ம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளது. இந்தநிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவு பெற்றுவிடும் நிலையில் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக கால அட்டவணையும் வகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 24ம் தேதி முதல் கட்ட பயிற்சி வகுப்பும், மே 7ம் தேதி 2ம் கட்ட பயிற்சி வகுப்பும், 12ம் தேதி மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பும் நடத்தப்பட இருக்கிறது. தொடர்ந்து மே 15ம் தேதி இறுதி கட்ட பயிற்சி வகுப்புடன் தேர்தல் பணி ஆணைகளும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Wednesday, March 30, 2016

கல்வி திட்டத்தில் வருகிறது மாற்றம்


பள்ளிகள் முதல் பல்கலை.,வரை கல்வி கட்டமைப்பில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என நிதி ஆயோக் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறைக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார்.

இது தொடர்பாக சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பள்ளி மாணவர்களே ஆசிரியர்களை மதிப்பீடு செய்யும் முறை கொண்டு வரப்பட வேண்டும். பல்கலை.,களிலும் ஆசிரியர் பயிற்சி கொண்டு வரப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கிரேடு அடிப்படையிலான கல்வி கொண்டு வரப்பட வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் தரம் பிரிக்கப்பட்டு, சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றாற் போல் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.

பள்ளிகளில் போலி ஆசிரியர்களை தடுக்க புகைப்படத்துடனான ஆசிரியர் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். இவைகள் ஆதார் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை பிரதமர் மோடி முன்வைத்துள்ளதாக மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, March 29, 2016

பி.இ. கலந்தாய்வு: ஏப்ரல் 15 முதல் இணையத்தில் மட்டுமே பதிவு: விண்ணப்ப விநியோகம் கிடையாது


2016-17 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் www.annaunivtnea.edu என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த முறை விண்ணப்பப் படிவம் விநியோகம் செய்யப்பட மாட்டாது என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் அண்ணா பல்கலை. பதிவாளர் கணேசன் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:-

தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பட்டுள்ள இந்தக் காலக்கட்டத்தில், விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்காக மாணவர்கள் அலைகழிக்கப்படுவதையும், நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் தவிர்க்கும் வகையில் முதல் முறையாக இணையத்தில் மட்டுமே விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிடப்படும். 15-ஆம் தேதி முதல் இணையத்தில் விவரங்களைப் பதிவு செய்யலாம். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு, 7 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படும்.

பிளஸ்-2 மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து -செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை- என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு கால அவகாசம் அளிக்கப்படும். தேவைப்பட்டால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படும்.

60 உதவி மையங்கள்: விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என 60 இடங்களில் உதவி மையங்கள் செயல்படும். இவற்றில் சந்தேகங்களை அறிவதோடு, விவரங்களை பதிவையும் செய்து கொள்ள முடியும். கட்டணம் எவ்வளவு? பொதுப் பிரிவினர் ரூ. 500-க்கான வரைவோலையை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கான கட்டணம் ரூ. 250-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். 7 நாள்களில் பதிவு செய்து விண்ணப்பிக்க முடியுமா? இணையத்தில் பதிவு முறை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 7 நாள்களுக்குள் பிளஸ்-2 மதிப்பெண்களைப் பதிவு செய்து விண்ணப்பிப்பது சாத்தியமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விண்ணப்பதாரர் மற்ற விவரங்களை ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் பதிவு செய்துவிட முடியும் என்றபோதும், பிளஸ்-2 மதிப்பெண்களைத் தேர்வு முடிவு வெளியான பிறகே பதிவு செய்ய முடியும். இதனால், கடைசி 7 நாள்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மதிப்பெண்களை பதிவு செய்ய முற்படுவர். இதனால், இணையதளம் முடங்க வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலை. பதிவாளர் கணேசனிடம் கேட்டபோது, இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும். தேவைப்பட்டால் கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்றார்.

புதிய பென்ஷன் திட்டத்தில்முன்பணம் பெறுவதில் சிக்கல்:4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி


தமிழக அரசு பணம் செலுத்தாததால் புதிய பென்ஷன் திட்டத்தில் 25 சதவீத முன் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேற்குவங்கம், திரிபுரா தவிர மற்ற மாநில அரசு ஊழியர்கள்,மத்திய அரசு ஊழியர்களுக்கு 2003 ஏப்., 1 முதல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தில் முன்பணம் பெற ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் மார்ச் 21ல் அனுமதி அளித்துள்ளது. பணியில் சேர்ந்து 10 ஆண்டு முடிந்திருந்தால், அவர்களின் பங்குதொகையில் 25 சதவீதம் முன்பணம் பெற்றுக் கொள்ளலாம்.

திருமணம், முதல்முறையாக வீடு வாங்க அல்லது கட்ட, இருதயநோய், சிறுநீரக, புற்றுநோய் உள்ளிட்ட 15 வகையான நோய்களுக்கு சிகிச்சை பெற முன் பணம் பெறலாம். முன்பணம் பெற (மருத்துவ செலவை தவிர) 5 ஆண்டுகள் இடைவெளி வேண்டும். மொத்தம் 3 முறை மட்டுமே பணம் பெற முடியும் என, தெரிவித்துள்ளது. ஆனால் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் முன்பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய பென்ஷன் திட்ட போராட்ட ஒருங்கிணைப்பாளர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: தமிழக அரசு வசூலித்த பணத்தை செலுத்தாததால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓய்வூதிய பணம் பெற முடியாமல் தவிக்கின்றனர். தற்போது முன்பணமும் பெற முடியாத நிலை உள்ளது. பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவிலும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் இல்லை. இதனால் மனஉளைச்சலில் உள்ளோம், என்றார்.

செயல்படாத பி.எப்., கணக்குக்கும் வட்டி


பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணம் செலுத்தப்படும் பி.எப்., கணக்குகளுக்கு, வட்டி அளிக்கப்படுகிறது. செயல்படாத கணக்குகளுக்கும், ஏப்ரல், 1 முதல் வட்டி அளிக்கப்படும். என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை: இன்று முதல் அமல்


வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வீடு தேடி வரும் திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக தேர்தல் கமிஷன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் கமிஷன், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தொலைந்து போன, வாக்காளர் புகைப்பட அட்டைக்கு பதிலாக, புதிய மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறவும், அண்மையில் எடுக்கப்பட்ட, வண்ண புகைப்படத்தை, வாக்காளர் அடையாள அட்டையில் புதுப்பித்துக் கொள்ளவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்று முதல், வாக்காளர் அடையாள அட்டையை, வீட்டிலேயே பெற்றுக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் படி, வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பும் வாக்காளர், எந்த மையத்திற்கும் செல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே, கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் மூலமாக, 001 என்ற படிவத்தை பூர்த்தி செய்து, உரிய தொகையை, ஆன்லைனில் செலுத்தினால், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

வாக்காளர் அடையாள அட்டைக்கு மட்டும், 25 ரூபாய் செலுத்தினால், தேர்தல் கமிஷன் தெரிவிக்கும், வசதியாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். தங்கள் இருப்பிடத்திற்கே, அடையாள அட்டை வரவேண்டும் என விரும்புவோர், கூடுதலாக தபால் செலவுக்கு, 40 ரூபாய், இதர செலவுக்கு, 2 ரூபாய் சேர்த்து, 67 ரூபாயை, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் செலுத்த வேண்டும்.
இதற்காக, தேர்தல் கமிஷன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒப்பந்தத்தில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஸ்டேட் பாங்க் சார்பில், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கான, தலைமை பொது மேலாளர் ரமேஷ் பாபு கையெழுத்திட்டனர்.

பணம் செலுத்தும் வசதி:தேர்தல் கமிஷன் இணையதளத்தில், ஏ.டி.எம்., கார்டு, கிரடிட் கார்டு, விசா கார்டு மூலம், வாக்காளர் அடையாள அட்டைக்கு, பணம் செலுத்தலாம். வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்தவர்கள் மட்டுமே, அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க முடியும்.

Saturday, March 26, 2016

அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம்


ரயில்களில், முழு டிக்கெட்டுக்கான கட்டணம் செலுத்தினால் மட்டுமே, குழந்தைகளுக்கு தனி இருக்கை அல்லது படுக்கை வசதி வழங்கப்படும்' என, ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:

தற்போது, ரயில்களில் பயணம் செய்யும், 5 - 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, அரை டிக்கெட் கட்டணத்தில், இருக்கை மற்றும் படுக்கை வசதி அளிக்கப்பட்டு வருகிறது. 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இந்நிலையில், 'அரை டிக்கெட் நடைமுறை ஒழிக்கப்படும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும், இனி, முழு டிக்கெட் தான் எடுக்க வேண்டும்' என, கடந்தாண்டு டிசம்பரில், ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, குழந்தைகளுக்கான கட்டணம் மற்றும் படுக்கை வசதி ஒதுக்கீட்டில் ரயில்வே நிர்வாகம் மாற்றம் செய்யவுள்ளது. புதிய விதிமுறைப்படி, பெரியவர்களை போல், 5 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், முழு கட்டணம் செலுத்தினால் தான், அவர்களுக்கு தனியாக, இருக்கை அல்லது படுக்கை வசதி ஒதுக்கப்படும். ஏப்ரல், 22 முதல், இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன்மூலம், ரயில்வேக்கு, ஆண்டுக்கு, 525 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

'பூத் சிலிப்' விவகாரத்தில் தேர்தல் கமிஷன்கண்டிப்பு:கட்சிகள் வழங்குவது செல்லாது என அறிவிப்பு


தேர்தல் கமிஷன் சார்பில், ஓட்டுச்சாவடி அலுவலர், வீடு வீடாகச் சென்று, பூத் சிலிப் வழங்குவார். இப்பணியானது, தேர்தல் பார்வையாளர் மேற்பார்வையில் நடைபெறும். இதில் தவறு எதுவும் நடந்தால், பார்வையாளரிடம் புகார் அளிக்கலாம். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வினியோகம் செய்தது போக மீதமுள்ள பூத் சிலிப்புகளை யாரிடமும் வழங்காமல், அவர்களே வைத்திருக்க வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர், தேர்தல் அன்று ஓட்டுச்சாவடி முன், பூத் சிலிப் வாங்காதவர்களுக்கு வழங்குவார். அரசியல் கட்சிகள் கொடுக்கும், பூத் சிலிப் செல்லாது. இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

Wednesday, March 23, 2016

ஆதார் எண் விவரம் சேகரிக்காத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை


மாணவர்களின் ஆதார் எண் விவரம் சேகரிக்காத, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின், ஆதார் எண் விவரங்களை சேகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆதார் எண் உள்ளவர்களிடம், ஆதார் அட்டை நகல் பெறப்பட்டது. அட்டை இல்லாதவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த பணிகள் பல இடங்களில் நடந்து முடிந்தாலும், மாணவர்களின் ஆதார் எண் விவரங்களை, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு, தலைமை ஆசிரியர்கள் அனுப்பவில்லை. இந்த எண்ணின்படியே, மாணவர்களின் விவரங்கள் கணினியில் சேர்க்கப்பட்டு, அதன்மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. எனவே, கோடை விடுமுறைக்குள் ஆதார் எண் விவரங்களை அனுப்ப வேண்டும்.

தாமதமானால், ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்


இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை, சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிட, பள்ளிக்கல்வித் துறையும் மற்றும் தேர்வுத் துறையும் திட்டமிட்டு உள்ளன.

* இந்த ஆண்டுக்கான மதிப்பெண் சான்றிதழ், பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும்

* வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படாத வகையில், வழவழப்பான கனமான தாளில் தயாரிக்கப்படும்

* பச்சை நிறத்தில் குறுக்கு கட்டம் போட்ட தாளில், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும்

* 'வாட்டர் மார்க்' என்ற ரகசிய குறியீடு, '2 டி பார்கோடு' மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கு தனி எண், பதிவு எண் போன்றவை இடம் பெறும்

*தமிழக அரசு முத்திரையுடன், நடப்பு ஆண்டை குறிக்கும் ரகசிய எண்ணும், சான்றிதழில் இணைக்கப்படும். இந்த சான்றிதழ் உண்மையா, பொய்யா என ஆய்வு செய்யும் வகையில், சென்னை, அண்ணா பல்கலையிலுள்ள தேர்வுத் துறையின், கணினி வழி சான்றிதழ் ஆய்வு மையத்தில், சரிபார்க்க அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, March 22, 2016

பிளஸ் 2 வேதியியலில் 6 கருணை மதிப்பெண்கள்


பிளஸ் 2 வேதியியல் தேர்வில் கடின வினாக்கள் இருந்ததாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், 6 மதிப்பெண்களை கருணை அடிப்படையில் வழங்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்ய உள்ள மாணவர்களுக்கு முக்கியப் பாடமான வேதியியல் தேர்வு கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது.

பலத்த மழை, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால், பொதுத் தேர்வு வினாத்தாள் அனைவருக்கும் எளிதானதாக இருக்கக்கூடும் என்ற கருத்து மாணவர்கள் மத்தியில் எழுந்திருந்தது. ஆனால், மாணவர்கள், பெற்றோரின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக வேதியியல் தேர்வும், கணிதத் தேர்வும் அமைந்திருந்தன. இதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், வேதியியல் வினாத் தாளில் இருந்த கடின வினாக்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவியை வேதியியல் பாட ஆசிரியர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தனர். இதைத் தொடர்ந்து, பாடத் திட்டத்துக்கு வெளியே இருந்து கேட்கப்பட்டிருந்த ஒரு மதிப்பெண் வினா 17 (பி பிரிவு), அதேபோல, ஏ பிரிவில் 18, வினா எண் 70-இல் பி ஆகிய இரு வினாக்களுக்கும் மாணவர்கள் எந்த ஒரு பதிலை அளித்திருந்தாலும் அவர்களுக்கு முறையே 1, 5 மதிப்பெண்கள் வழங்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் வேதியியலில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தேர்வுத் துறையின் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ள தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் சங்கத் தலைவர் சுரேஷ், இதேபோல தினசரி 40 விடைத்தாள் திருத்த வேண்டும் என்ற உத்தரவையும் 36 என குறைத்து தேர்வுத் துறை அறிவித்திருப்பதாகவும் தெரிவித்தார். வேதியியல் தேர்வின் விடைக் குறிப்புகள் இந்தத் திருத்தத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்றும், இந்த விடைத் தாள்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் மதிப்பீடு செய்யப்படும் என்றும் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இணையதளத்தில் அறியலாம்


வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பின் நிலையை www.tn.gov.inemployment என்ற இணையதளத்தில் அறியலாம். அனைவரும் தங்களது படிப்பு குறித்த விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். இதுதவிர, கூடுதல் படிப்புகளையும் பதிந்தும், முந்தைய பதிவை அவ்வப்போது புதுப்பிக்கவும் செய்கின்றனர். இந்த பதிவு மூப்பின் நிலவரத்தை இணையதளத்தில் தெரிந்துகொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு ஏப்., 22 முதல் கோடை விடுமுறை


தமிழகத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ம் தேதி முதல் மற்றும் 5ம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளிகளுக்கு, மே 1ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ் 2வுக்கு, ஏப்., 1ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 10ம் வகுப்புக்கு, ஏப்., 11; விருப்ப பாடம் எழுதுவோருக்கு, ஏப்., 13ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, ஏப்., 15ம் தேதிக்குள் தேர்வுகள் முடிகின்றன.

அதே போல், 6ம் வகுப்பு - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்., 21; மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், ஏப்., 30ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. எனவே, ஏப்., 22ம் தேதி முதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும்; மே 1ம் தேதி முதல், துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும், கோடை விடுமுறை துவங்குகிறது.

ஜூன் 1ம் தேதி, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகம், விரைவில் வெளியிடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்

வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?


வங்கிகள், நாளை முதல், மார்ச், 31 வரை இயங்காது' என, வெளியான தகவலுக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சீனிவாசன் கூறியதாவது:மார்ச், 24 - ஹோலி பண்டிகை; 25 - புனித வெள்ளி; 26 - நான்காவது சனிக்கிழமை; 27 - ஞாயிற்றுக்கிழமை. இதனால், நான்கு நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில், ஹோலி பண்டிகைக்கு விடுமுறை இல்லை என்பதால், 24ல், இங்கு வங்கிகள் இயங்கும்.

பொதுத்துறையைச் சேர்ந்த, ஐ.டி.பி.ஐ., வங்கியை, தனியார் மயமாக்கும் மத்திய அரசின் செயலை கண்டித்து, மார்ச், 28ல், ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தம், ஐ.டி.பி.ஐ., வங்கியில் மட்டும் நடக்கும் என்பதால், மற்ற வங்கிகள், 28ல் வழக்கம் போல இயங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Monday, March 21, 2016

மத்திய அரசு பயிற்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு


மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மூலம், மாநில அரசுப் பள்ளிகளில், பயிற்சி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது. மாநில அரசு பள்ளிகளில், கல்வித்தரத்தை உயர்த்த, மத்திய அரசு புதிய முன்னோடி திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்தி, அவர்கள் மூலம், மாநில அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தர, மத்திய அரசு திட்டமிட்டது.

இதுகுறித்து, மாநில அரசுகளின் விருப்பத்தை கோரியது. அதில், 19 மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசின் திட்டத்துக்கு விருப்பம் தெரிவித்து உள்ளன. ஆனால், தமிழக அரசு அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.இதேபோல், மத்திய அரசின், ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் மூலம், அனைத்து பி.எட்., கல்லுாரி மாணவர்களுக்கு, சிறப்பு ஆசிரியர் பயிற்சி வழங்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

ஏ.டி.எம்., மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!


ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணம் எடுக்கும் மையத்தில், மின் கட்டணம் செலுத்தும் சேவையை துவக்க, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்ததில் இருந்து, 20 நாட்களுக்குள், கட்டணத்தை செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும், மின் இணைப்பு வழங்கப்படும். மாதந்தோறும், மின் கட்டணம் வாயிலாக, 2,500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மின் கட்டண மையங்களில், கூட்டம் நிரம்பி வழிவதால், பலர் பணத்தை தொலைத்து விடுகின்றனர். இதையடுத்து, 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு', இணைய தளம், அஞ்சல் நிலையம், அரசு சேவை மையங்களில், மின் கட்டணம் செலுத்தும் வசதியை, மின் வாரியம் துவக்கியது.

அந்த வரிசையில், தற்போது, ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணம் எடுக்கும் மையத்தில், மின் கட்டணம் செலுத்தும் சேவையை அறிமுகம் செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏ.டி.எம்., மூலம், மின் கட்டணம் செலுத்தும் சேவையை துவக்க, அரசு வங்கிகள், தனியார் வங்கிகளுடன் பேச்சு நடத்தப்படும். சோதனை முறையில், ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம்., மையத்தில், மின் கட்டணம் செலுத்தும் வசதி துவங்கப்பட்டு உள்ளது. விரைவில், 15 வங்கிகளின் ஏ.டி.எம்.,களில், அந்த சேவை விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்