இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, May 31, 2015

உதவிதொடக்ககல்வி அலுவலர் வெட்டிக் கொலை

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருவாரூர் விளமல் பெரியார் நகரைச் சேர்ந்தவர் சி. வேணுகோபால்(56). இவர் கொரடாச்சேரியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வேணுகோபால் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளம் வடகரை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.

வெட்டுக் காயங்களுடன் வேணுகோபால் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குள் ஓடினார். இதையடுத்து அங்கிருந்த தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 108 ஆம்புலென்ûஸ வரவழைத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேணுகோபாலை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேணுகோபாலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருவாரூர் நகரக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து, சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக வேணுகோபால் கொலை செய்யப்பட்டிருக்கலாமென போலீஸார் தெரிவித்தனர்.

வீடு,மனைக்கு முன்பணம் கொடுக்க இன்று முதல் தடை-மத்திய அரசு

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி வீடு, மனை வாங்கும் போது, முன்பணமாக, 20 ஆயிரம் ரூபாயும், அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக கொடுப்பதும், பெறுவதும் இன்றுமுதல் தடை செய்யப்படுகிறது.

மத்திய அரசின், 2015 -- 16, பட்ஜெட்டில், கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, 'வீடு, மனை போன்ற அசையா சொத்துக்கள் பரிமாற்றத்தின் போது, கறுப்பு பணம் புழங்க வாய்ப்புள்ளதால், முன்பணமாக, 20 ஆயிரம் ரூபாயும், அதற்கு மேலான தொகையை ரொக்கமாக செலுத்துவது, வருமான வரி சட்டப்படி தடை செய்யப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.வருமான வரி சட்டத்தின், 269வது பிரிவின் படி, நிதி முதலீடு சார்ந்த சில நடவடிக்கைகளில், 20 ஆயிரம் ரூபாய்; அதற்கு மேலான தொகையை ரொக்கமாக கொடுக்கவும், பெறவும் தடை உள்ளது. இந்த தடை உத்தரவு, இப்போது வீடு, மனை விற்பனையில் முன்பணம் கொடுப்பதற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதை மீறி பெறப்படும் தொகையில், 100 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.கடந்த சில ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த ரியல் எஸ்டேட் துறையில், இப்போது தான் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது போன்று தடை விதிப்பது தேவையற்றது என, ரியல் எஸ்டேட், கட்டுமான அமைப்புகள் அதிருப்தியை தெரிவித்துள்ளன. இதுகுறித்து, அடுக்குமாடி கட்டுனர் சங்கத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: *அவசரகால நிதி தேவைக்காக, வீடு, மனையை விற்போரின் அடிப்படை நோக்கத்தை சிதைக்கும் வகையில், இந்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

*ரொக்கத்தை தவிர்த்து காசோலையாக பெறலாம் என்றாலும், அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அப்பாவி மக்கள், நில அபகரிப்பு செய்யும் நபர்களால் ஏமாற்றப்படலாம்.

*வங்கி வரைவோலை (டி.டி.,) வாயிலாக பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், 48,500 ரூபாய் வரையே வங்கிகளில் ரொக்கமாக செலுத்த முடியும்.

* பதிவு செய்யப்படும் விற்பனை ஒப்பந்தத்தில் முன்பணம், 19,500 ரூபாய் மட்டுமே பெறப்பட்டதாக குறிப்பிட்டு விட்டு, ஆவணத்தில் காட்டாமல், மீதித் தொகையை பரிமாற்றம் செய்தல் போன்ற மோசடிகளுக்கு இந்த உத்தரவு வழிவகுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார். இந்த உத்தரவுப்படி, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் முன்பணம் பெறப்பட்டதாக வரும் வீடு விற்பனை ஒப்பந்த ஆவணங்களை பதிவு செய்வது தொடர்பாக, பதிவுத்துறை அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்குவது குறித்து, இத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Saturday, May 30, 2015

ஏ.இ.இஒ அலுவலகத்தில் பிராட் பேன்ட் வசதி இல்லை

தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சம்பள பில் தயாரிப்பது முதல், தகவல் பரிமாற்ற கடிதம் வரை, ஆன்-லைன் மூலமே மேற்கொள்ளப்படும் சூழலில், உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு, இதுவரை 'பிராட்பேண்ட்' வசதி செய்துதரப்படாததால், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.சொந்த பணத்தில்...தமிழக தொடக்கக்கல்வித்துறையில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சம்பளம், நிலுவைத்தொகை உள்ளிட்டவை பெற்றுத்தரும் நிர்வாக அலுவலகமாக, உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் உள்ளது.

ஒரு ஒன்றியத்துக்கு ஒரு உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் வீதம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிலும், 350 முதல், 700 ஆசிரியர் வரை, சம்பளம் பெறுகின்றனர். இவர்களின் சம்பள பில் தயாரிக்கும் முறை, கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து, ஆன் - லைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய சுற்றறிக்கை, துறை சார்ந்த கடிதம் உள்ளிட்டவையும், 'இ - மெயில்' மூலமாகவே அனுப்பப்படுகிறது.இதனால், உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில், தினமும் பிராட்பேண்ட் வசதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், இதுவரை எந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கும், இன்டர்நெட் வசதி ஏற்படுத்தித்தரப்படவில்லை. இதனால், அங்கு பணிபுரியும் அலுவலர்கள், தங்களது சொந்த பணத்தில், இன்டர்நெட் பயன்படுத்தி, பணிபுரிய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

ஆன் - லைனில்...இதுகுறித்து, கல்வித்துறை பணியாளர்கள் கூறியதாவது:உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 10 முதல் 100 ஆசிரியர்கள் இருக்கும் சூழலில், அங்கு பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் அதற்கான கட்டணம், அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில், பிராட்பேண்ட் வசதியில்லை.இதனால், ஆசிரியர்களிடம் வசூல்வேட்டை நடத்தியோ, அலுவலர்கள் தங்கள் கைக்காசை செலவழித்தும், இன்டர்நெட் வசதியை பயன்படுத்த வேண்டிஉள்ளது. அனைத்து பணிகளும், ஆன் லைனில் வழங்கிவிட்டு, அதற்கான வசதியை ஏற்படுத்தி தராமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒத்திவைக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள்.விரக்தியில் அரசு ஊழியர் ஆசிரியர்கள்

ஒத்தி வைக்கப்பட்ட மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை, விரைவில் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், அரசு ஊழியர்கள் உள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஆண்டு தோறும் சீருடை பணியாளர் அல்லாத அரசு ஊழியர்களுக்கான தடகளம், கூடைபந்து, கையுந்து பந்து, டென்னிஸ், கபடி, மேஜைபந்து போட்டிகள் மே, ஜூனில் நடப்பது வழக்கம். மாவட்டந்தோறும், 60க்கு அதிகமான அரசு ஊழியர்கள் பங்கேற்பர்.

இந்தாண்டுக்கான கூடை பந்துக்கான போட்டி மதுரையில், மே 15 முதல் 17 வாலிபால் போட்டிகள், மே 19 முதல் 21 வரை தஞ்சாவூரிலும் நடப்பதாக இருந்தது.அந்த நாட்களில் மாநிலத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதை தொடர்ந்து போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் இன்றுவரை போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்படாமல் உள்ளது.

தற்போது கோடை விடுமுறை என்பதால், ஜூன் முதல் வாரத்திற்குள் போட்டிகளை நடத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆன்-லைன் ஆசிரியர் கலந்தாய்வுக்கு எதிர்ப்பு

ஆன்-லைன்' முறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டுதோறும், மே மாதத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.

மறைத்ததாக புகார்:கடந்த ஆண்டு, மாநில அளவில், ஒரே நேரத்தில், ஆன்-லைன் மூலம் நடத்திய கலந்தாய்வில், பல இடங்கள் மறைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. நடப்பாண்டில், வரும், ஜூன் மாதம், கலந்தாய்வு நடக்கும் என, கூறப்படுகிறது. வழக்கம்போல், ஆன்-லைன் முறையில், கலந்தாய்வை நடத்தாமல், மாவட்ட வாரியாக, வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும் என, ஆசிரியர் கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலர் கோவிந்தன் கூறியதாவது:இருக்கும்; ஆனா, இருக்காதுகலந்தாய்வில் பங்கேற்பதற்கு முன்பே, அருகில் எந்தந்த காலியிடங்கள் உள்ளன என, ஆசிரியர்கள் தெரிந்து கொள்கின்றனர்.

அந்த இடங்களை எதிர்பார்த்து சென்றால், அவை, கலந்தாய்வில் காட்டப்படுவதில்லை. ஒருவர், இரண்டு நிமிடத்தில், இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதால், நிதானமாக, அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்ய முடியாமல், துாரமாக உள்ள பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.ஆசிரியர் சங்க நிர்வாகிகள் என்ற முறையில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம், இந்த குறையை கூறினால், 'எங்களுக்கு தெரியாது; இயக்குனரகத்துக்கு, காலிப்பணியிட பட்டியலை அனுப்பிவிட்டோம்' என கைவிரித்து விடுகின்றனர்.

நடவடிக்கை தேவை:இயக்குனரகத்தில் கேட்டால், 'மாவட்டங்களில் இருந்து வந்த பட்டியலின் அடிப்படையிலேயே, கலந்தாய்வு நடக்கிறது' என, திருப்பி அனுப்புகின்றனர்.'ஆன்-லைன்' வேண்டாம்இதனால், ஆன்-லைன் கலந்தாய்வை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையாக கலந்தாய்வை நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட அளவிலான கலந்தாய்வில், தவறு நடந்தாலும், தட்டிகேட்க, வழி உண்டு. ஆன்-லைன் கலந்தாய்வில், எதையும் கேட்க வழியில்லை.இவ்வாறு, அவர்தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு புத்தக விலை இரட்டிப்பு உயர்வு

பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தின் விற்பனை விலை, இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக், காலணி, சீருடை என, அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் பள்ளி கல்வித் துறை பரிந்துரைப்படி, தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் மூலம் தருவிக்கப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு விற்பனைக்கு வழங்கப்படுகின்றன

. நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு தேவையான புத்தகங்கள், மாவட்டந்தோறும் உள்ள பாட நுால் கழகத்தின் மூலம், பள்ளிகளுக்கு ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இதில், 10ம் வகுப்பு பாட புத்தகத்தின் விலை, இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அது போல, மேல்நிலை வகுப்புக்கான பாட புத்தகங்களின் விலை, கடந்த ஆண்டை விட, 80 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014 - 15ம் ஆண்டில், 10ம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் புத்தகம் தலா, 85 ரூபாய்க்கு விற்கப்பட்டன.

நடப்பாண்டில், தமிழ் புத்தகம் - 110 ரூபாய்; ஆங்கிலம் - 90 ரூபாய்; கணிதம் - 160 ரூபாய்; அறிவியல் - 170 ரூபாய், சமூக அறிவியல் - 130 ரூபாயாகவும், ஒரு செட், 660 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன; இது, கடந்த ஆண்டை விட, 235 ரூபாய் கூடுதல்.அதே போல, மேல்நிலை வகுப்புகளுக்கான தமிழ் புத்தகம், 25 ரூபாயிலிருந்து, 40 ரூபாயாகவும்; ஆங்கில புத்தகம், 28 ரூபாயிலிருந்து, 60 ரூபாயாகவும்; மற்ற புத்தகங்கள் அனைத்தும், 60 முதல், 80 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது:தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள், தமிழ்நாடு பாடநுால் கழகம் மூலம் தேவைக்கு ஏற்ப கிடைக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாறும் போது, புத்தகத்தின் விலை உயரும்.

கடந்த ஆண்டு பாடத்திட்டம் மாறாததால், புத்தகத்தின் விலை உயரவில்லை. நடப்பாண்டு, ஜனவரி மாதம் புத்தகத்தின் விலையை உயர்த்தி, அரசாணை வெளியிட்டு, தனி யார் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது, தேவைக்கு ஏற்ப புத்தகம் வினியோகம் செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.-

மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டுவாடகை படி உயர்கிறது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நேற்று எடுக்கப்பட்ட சில முடிவுகள் விவரம்: l மத்திய அரசு ஊழியர்களுக்கு, வீட்டு வாடகை மற்றும் பயணப்படியை அதிகரிக்கும் வகையில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், 29 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களை தரம் உயர்த்த, மத்திய அமைச்சரவை சம்மதம் தெரிவித்தது.

இதன்படி, மாற்றி அமைக்கப்பட்ட நகரங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள், 2014 ஏப்ரல், 1ம் தேதி முதல், உயர்த்தப்பட்ட வீட்டு வாடகை படி மற்றும் பயணப் படியை பெறலாம். இதனால், மத்திய அரசுக்கு, 128 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

மத்திய அரசின் இந்த முடிவால், தமிழகத்தில், ஈரோடு, கோயம்புத்துார் நகரங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள், கூடுதல் வீட்டு வாடகை மற்றும் பயணப் படியை பெறலாம். l குறு, சிறு மற்றும் மத்திய தர தொழில் நிறுவனங்கள் துறையில், இந்தியா - சுவீடன் இடையே, ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும், நேற்று ஒப்புதல் தரப்பட்டது.

பட்டப்படிப்புடன் கூடிய பயிற்சி.நாடு முழுவதும் அறிமுகம்

நடப்பு கல்வியாண்டு முதல், பட்டப்படிப்புடன் கூடிய ஆசிரியர் பயிற்சி படிப்புகள் துவக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகளில், 'பி.ஏ., - பி.எட்.,' மற்றும், 'பி.எஸ்சி., - பி.எட்.,' பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளில், ஏதாவது ஒரு பாடப்பிரிவிலான பட்டப்படிப்புடன், பி.எட்., படிப்பையும் முடிக்கலாம். பின், மூன்று ஆண்டுகளில், முதுகலை பட்டப்படிப்புடன் எம்.எட்., படிப்பை முடிக்கலாம்.

ஏற்கனவே முதுகலை பட்டம் பெற்றவர்கள், மூன்று ஆண்டுகளில், பி.எட்., - எம்.எட்., பட்டம் பெற முடியும். இதன் மூலம், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நீக்கப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியராக விரும்புவோர், ஏழு ஆண்டுகளில், குறிப்பிட்ட பாடப்பிரிவில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புடன், பி.எட்., எம்.எட்., படிப்புகளை யும் முடித்து விடலாம்.இத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு, படிக்கும்போதே, பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பும் வழங்கப்படும்.தொலைதுார கல்வியில், பி.எட்., படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பிக்கும் திறனை அதிகரிப்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளி கல்வி துறை செயலர் விருந்தா ஸ்வரூப் கூறியுள்ளார்.

Friday, May 29, 2015

ஜூன் முதல் ரயில் கட்டணம் உயர்வு

ரயில் பயணிகளின் தலையில் மீண்டும் கட்டண உயர்வை சுமத்த, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சாதாரண பெட்டிகளுக்கான கட்டணத்திற்கு வசூலிக்கப்படும் சேவை வரி, ஒன்றரை மடங்கு வரை உயர்த்தப்படவுள்ளது. 'ஏசி' பெட்டிகளில் இந்த கட்டண உயர்வு, 30 முதல், 100 ரூபாய் வரை அதிகரிக்கிறது. கடந்த ரயில்வே பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சேவை வரியை, 12.36 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்துவதற்கான அறிவிப்பு, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் 1 முதல், சேவை வரியை உயர்த்த திட்டமிட்டு இருந்தாலும், இதுவரை, 'சர்வரில்' அதற்கான மாற்றம் செய்யப்படவில்லை. புதிய கட்டணத்திற்கான மாற்றம் செய்யப்படும் வரை, பயணிகளிடம் இருந்து, பழைய கட்டணமே வசூலிக்கப்படும். ஜூன் 1ம் தேதி அல்லது அதற்கு பின், பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து, மீதி தொகை வசூலிக்கப்படும். இதுகுறித்து, அனைத்து மண்டலங்களுக்கும் எழுத்து மூலமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Thursday, May 28, 2015

பிளஸ் 2 பிற பாடங்களின் விடைத்தாள் நகலையும் பதிவிறக்கம் செய்யலாம்

இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய முக்கியப் பாடங்களைத் தொடர்ந்து, கணினி அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கான பிளஸ் 2 விடைத்தாள் நகல்களையும் வெள்ளிக்கிழமை (மே 29) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 1 லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இதில், முதல்கட்டமாக முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை ள்ஸ்ரீஹய்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இப்போது மீதமுள்ள மொழிப்பாடம், வரலாறு, கணினி அறிவியல் போன்ற பிற பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களையும் அதே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்த பிறகு, விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், ள்ஸ்ரீஹய்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஜூன் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். மேலும், விபரங்களுக்கு 8012594109, 8012594119 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

ஜூன் 5முதல் குரூப்1 தேர்வு

தமிழகத்தில் ஜூன் 5 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள குரூப் 1 பிரதானத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து, தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1 முதன்மைத் தேர்வு (Main Written Examination) ஜூன் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் முற்பகல் மட்டும் சென்னை தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து சந்தேகம் ஏதேனும் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 மூலமாகவோ விளக்கம் பெறலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஆய்வக உதவியாளர் தேர்வு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லையா?

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர் பணிக்கு அரசு தேர்வு துறை மூலம் எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது. இத்தேர்வை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். தேர்வு மையம் ஏற்பாடு செய்தல், தேர்வு கண்காணிப்பு குறித்து சி.இ.ஓ.,க்கள் முதன்மை கண் காணிப்பாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். விடைத்தாள் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்வது, தேர்வு அறைக்குள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹால்டிக்கெட்: ஹால் டிக்கெட்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பித்த போது, வழங்கிய ஒப்புகை சீட்டிலுள்ள பதிவு எண், பிறந்த தேதியை குறிப்பிட்டால் ஹால்டிக்கெட் பெறலாம். இதில், ஏதேனும் சிக்கல் இருந்தால் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தை அணுகினால் உரிய விளக்கமளிக்கப்படும் என்றும், வாய்ப்பு இருந்தால் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி ஜூன்.1ம் தேதி பள்ளி திறக்கப்படும்-இயக்குநர்

பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள தால், மாணவர் நலன் கருதி, பள்ளி திறக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர், தனியார் பள்ளி நிர்வாகிகள், அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால், பெற்றோர், மாணவ, மாணவியர் மத்தியில், ஒருவித குழப்பம் நிலவி வருகிறது. இதுகுறித்து, தினமும், மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, நேரடியாகவும், போன் வாயிலாகவும், பெற்றோர் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:

பள்ளி திறக்கும் தேதியில், எவ்வித மாற்றமும் செய்யவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்.பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகின்றன. பெற்றோர், எவ்விதகுழப்பமும் அடைய தேவையில்லை.இவ்வாறு, அவர்தெரிவித்தார்.

Wednesday, May 27, 2015

மாணவர் சேர்க்கை நோட்டீஸ்

கல்வி தரம், உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பிட்டுஅரசு பள்ளிகள் நோட்டீஸ் அச்சிட்டு மாணவர்களை சேர்க்க தீவிரம்: தனியார் பள்ளிகள் கலக்கம்

தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்து மாணவர்களை சேர்ப்பது போல அரசுப் பள்ளிகளும் மாணவர்களை சேர்க்க  நோட்டீஸ் அச்சிட்டு  விளம்பரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்  நடத்தும் பள்ளிகள், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை நடத்தும் பள்ளிகள், 6 முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகு்ப்புவரை நடத்தும் பள்ளிகள் என  பல வகைப்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறக்கும் முன்னதாக  தனியார் பள்ளிகள் பலவற்றில் முன்கூட்டியே  மாணவர் சேர்க்கை நடத்தி முடித்து விடுகின்றனர்.

ஆனால், மே மாதம் தான் சேர்க்கை நடத்த வேண்டும் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உத்தரவிட்டு இருந்தும் அதை பெரும்பாலான பள்ளிகள்  கடைபிடிப்பதே இல்லை. பெரும்பாலான தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் படித்து முதலிடம் பிடித்த மாணவர்களின் போட்டோக்களை  வெளியிட்டு தங்கள் பள்ளி பற்றி விளம்பரம் செய்து மாணவர்களை சேர்த்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க அரசுப் பள்ளிகளில் மாணவர்  சேர்க்கை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. அத னால் அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று தொடக்க  மற்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வீடுவீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும்  வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இப்போதே பிரச்சாரம் செய்ய  தொடங்கிவிட்டனர். அரசு வழங்கும் 14 இலவச பொருட்கள் குறித்தும் நோட்டீஸ் அச்சிட்டு வழங்கி வருகின்றனர்.

இதுதவிர சில பள்ளிகளில் சேர்த்தால் யோகா பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறை, டிடிஎச் வசதி, கட்டிட வசதி, கழிப்பறை வசதி, நூலக வசதி, ஸ்கைப்  வசதி, இன்ட்நெட் வசதி, குடிநீர் வசதி, அறிவியல் ஆய்வக வசதி, செஸ் மற்றும் கேரம்போட்டு விளையாட்டு, சிறந்த தரமான ஆசிரியர்கள்,  விளையாட்டுப் பொருட்கள் போன்ற வசதிகள் இருப்பதாகவும் நோட்டீஸ் அச்சிட்டு அந்தந்த பகுதிகளில் வழங்கி வருகின்றனர்.

இன்னும் சில தலைமை ஆசிரியர்கள் பள்ளி திறந்த பிறகு மாணவர்களை கொண்டு அந்தந்த ஊரில் பேரணி நடத்தி மாணவர்களை சேர்க்க சொல்லி  பிரச்சாரம் செய்யவும் உள்ளனர். ஆனால், தனியார் பள்ளிகளில் உள்ள பெரும்பாலான வசதிகள் அரசுப் பள்ளிகளில் இல்லை என்பதை காரணம் காட்டி  அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதை பெற்றோர் தவிர்த்து வருகின்றனர்.