இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 31, 2015

கோடை விடுமுறையில் வகுப்பு?

அடுத்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையிலும் அரசு பள்ளிகளில் வகுப்பு தொடங்கியது.

2 வருடம் பாடம் படிப்பு

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகளில் 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 9-வது வகுப்பு பாடங்களை படிக்காமல் எஸ்.எஸ்.எல்.சி. பாடங்களையும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 11-வது வகுப்பு பாடங்களை படிக்காமல் நேரடியாக பிளஸ்-2 பாடங்களையும் படிக்க வைக்கப்படுகிறார்கள்.

இந்த சம்பவம் கடந்த பல வருடங்களாக நடக்கிறது. அதாவது ஒரு வருட பாடங்களை 2 வருடம் படிக்கும் இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கிடைப்பது மிக சிரமம். அதுபோல கல்வி கட்டணமும் அந்த பள்ளிகளில் அதிகம். 2 வருடம் ஒரே பாடங்களை படிப்பதால் பெரும்பாலும் இந்த பள்ளி மாணவர்கள்தான் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று வருகிறார்கள்.

உயர்கல்வியில்மிளிர முடியவில்லை

ஆனால் அந்த பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் புரிந்து படிக்காத காரணத்தால் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. சேர்ந்தவர்கள்கூட கணிதத்தேர்வில் தோல்வி அடைகிறார்கள். காரணம் இவர்கள் 11-வது வகுப்பு கணிதத்தை படிக்காதது என்று கூறப்படுகிறது. அதாவது இந்த மாணவர்களால் உயர் கல்வியில் பிரகாசிக்க முடியவில்லை.

இந்த பள்ளிகளின் நடவடிக்கைகளை பார்த்து தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 9-வது வகுப்பு பாடம் நடத்துகிறார்கள். 11-வது வகுப்பையும் நடத்துகிறார்கள். ஆனால் அவர்கள் கோடை விடுமுறையில் ஒரு மாதம் மட்டும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு பாடத்தை நடத்துகிறார்கள்.

அரசு பள்ளிகளில் வகுப்பு தொடங்கியது

இதை அறிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாமும் கோடை விடுமுறையில் வகுப்பு நடத்தலாம் என்று கருதி தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் அடுத்த வருடம் பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்த முடிவு செய்துள்ளனர். சில பள்ளிகளில் காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரை நடத்தப்படுகின்றன. இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:-

பிளஸ்-2 பாடம் எடுக்கும் வகுப்பு கோடை விடுமுறையில் தொடங்கி உள்ளது. ஒருவாரம் வேதியியல் பாடம் நடத்த திட்டமிட்டு வேதியியல் தொடங்கி உள்ளனர். அடுத்த வாரம் கணிதம் நடத்த உள்ளனர். அதற்கு அடுத்தவாரம் இயற்பியல் நடத்த இருக்கிறார்கள். ஏப்ரல் 22-ந்தேதி வரை வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. ஆனால் இந்த முறை அனைத்து பள்ளிகளிலும் அல்ல. சில பள்ளிகளில் மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ளது.

இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

Monday, March 30, 2015

எம்.காம், பி.எட் ஊக்க ஊதியம் இல்லை

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே கடைசி வாரத்திலும் வெளியாகும்,” என, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார். அரக்கோணத்தில் அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும், 155 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடம், கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க, 208 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக, அனைத்து பள்ளிகளிலும் இந்த வசதி செய்யப்படும். ஏப்ரல் முதல் வாரத்திலேயே, 10 வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கப்படும். ஜூனில், 6 லட்சம் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, மே கடைசி வாரத்திலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, நோட்டு, புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

வாக்காளர் அடையாள அட்டையில் வண்ண புகைப்படம்

வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பழைய புகைப்படத்தை மாற்றி, புதிய புகைப்படத்தைச் சேர்க்க, தேர்தல் கமிஷன் வாய்ப்பு வழங்கி உள்ளது. வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிக்காக, வாக்காளர்களின் ஆதார் எண், மொபைல் எண், 'இ - மெயில்' முகவரி உள்ளிட்டவற்றை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், கடந்த, 25ம் தேதி முதல், வீடு வீடாகச் சென்று சேகரித்து வருகின்றனர். 'பழைய கருப்பு வெள்ளை அடையாள அட்டையில் உள்ள தங்களது புகைப்படம் தெளிவாக இல்லை; அட்டையும் சேதமடைந்துள்ளது.

அதை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வாக்காளர்கள் தரப்பில், தேர்தல் அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு, தற்போது தேர்தல் கமிஷன் வாய்ப்பு வழங்கி உள்ளது. இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் மற்றும் அடையாள அட்டையில் உள்ள, தங்களது பழைய புகைப்படத்தை மாற்ற, படிவம் 8யை பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது, புதிய கலர் படத்தை, அதனுடன் இணைக்க வேண்டும்.

இப்பணிகள் முடிந்து, ஜூலையில் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில், புதிய புகைப்படம் இடம் பெறும். முதற்கட்டமாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு, புதிய, 'சிலிப்' வழங்கப்பட்டு, புதிய அடையாள அட்டை பின்னர் தரப்படும். ஆதார் அட்டை வைத்துள்ளவர்கள், இல்லாத வாக்காளர்களின் விவரங்கள், தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Sunday, March 29, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் விரைவில் பரிந்துரை

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை, ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது; இதில், தாங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்குமா என, ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

நாடு முழுவதும், 30 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். நாட்டில் நிலவும் விலைவாசிக்கேற்ப, இவர்களுக்கான சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க, சம்பளக் கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிஷன், 10 ஆண்டு களுக்கு ஒருமுறை, தன் பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளிக்கும். இதன்படி, வரும் ஆகஸ்ட்டில், ஏழாவது சம்பளக் கமிஷன், தன் பரிந்துரையை அளிக்க உள்ளது.

சம்பளம் உயரும்:

இந்த பரிந்துரையில் சில திருத்தங்கள் செய்து, மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும். இதனால், நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு கள், தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என, ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே, ஒவ்வொரு துறைகளைச் சேர்ந்தவர்களும், தங்களுக்கு தேவையான சம்பள உயர்வு, சலுகைகள் குறித்து, ஏழாவது சம்பளக் கமிஷனிடம் அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர். மத்திய அரசு ஊழியர் சங்கம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
*மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை, 26 ஆயிரமாக ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும்.
*மூன்று முறை பதவி உயர்வு என்ற நிலையை மாற்றி, முதல் நிலை அதிகாரிகள் போல், ஐந்து முறை பதவி உயர்வு வழங்க வேண்டும்.
*கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை, மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும்.
*'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு, முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.
*தற்போது, 50 சதவீதமாக இருக்கும் ஓய்வூதியத்தை, 67 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவை உட்பட, பல்வேறு கோரிக்கைகளை, மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதவிர, மத்திய அரசில் பணியாற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும், தனித்தனியாகவும், ஏழாவது சம்பளக் கமிஷ னிடம் அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளன.

இந்திய வருவாய் துறையான, ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள், 58 பக்க மனுவை கொடுத்து உள்ளனர். இதுகுறித்து, ஐ.ஆர்.எஸ்., சங்க தலைவர் ஜெயந்த் மிஸ்ரா கூறியதாவது:பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து, வரித்துறை அதிகாரிகளை விட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கே அதிக சம்பளம் தரப்படுகிறது. முன், வரியை வசூலிக்கும் பொறுப்பு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் இருந்தது.

நேர்முக வரி வருவாய்:

தற்போது நிலைமை மாறி விட்டது. நேர்முக வரி வருவாயை வசூலிக்கும் பொறுப்பை, நாங்களே கவனித்து வருகிறோம். 2001ம் ஆண்டை ஒப்பிடும் போது, 2014ல், நேர்முக வரி மூலம் கிடைத்துள்ள வருவாய், 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்த வருவாயை வசூலிப்பதற்கான செலவு, மிகவும் குறைவு. நாங்கள் வசூலிக்கும், ஒவ்வொரு, 100 ரூபாய்க்கும், 57 பைசா மட்டுமே அரசு செலவிடுகிறது. ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜப்பான் நாடுகள் வரி வசூலுக்காக செலவிடும் தொகையை விட, இது மிகக்குறைவு. எனவே, ஏழாவது சம்பளக் கமிஷனில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை விட, எங்களுக்கு கணிசமான சலுகைகள் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இதுபோல், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சங்கம் சார்பிலும், 137 பக்க அறிக்கை தரப்பட்டு உள்ளது. அதில், 'நாடு முழுவதும், 4,720 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு நியாயமான சம்பள உயர்வு அளிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சம்பள கமிஷன்:

* 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சம்பளக் கமிஷன், தன் பரிந்துரையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும்.
*இந்த கமிஷன் அமைக்கப்பட்ட இரு ஆண்டுகளில், தன் பரிந்துரையை அரசிடம் அளிக்கும்.
*இந்த கமிஷனின் பரிந்துரைப்படி தான், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பதவி உயர்வு அளிக்கப்படும்.
*இதில் சில திருத்தங்களை செய்து, மாநில அரசுகளும், தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவிக்கும்.
*தற்போது, ஏழாவது சம்பளக் கமிஷன், சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி அசோக் மாத்துார் தலைமையில், 2014ல் அமைக்கப்பட்டது.
*இந்த கமிஷன், வரும் ஆகஸ்ட்டில் தன் பரிந்துரைகளை தாக்கல் செய்யும் என தெரிகிறது.
*இந்த பரிந்துரைகள், அடுத்தாண்டு ஜன., 1ம் தேதி முதல், அமல்படுத்த வாய்ப்புள்ளது.

ஜாக்டோ கூட்டம்.இன்று ஆலோசனை

ஆசிரியர்களின், 15 ஆண்டு கால, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து, ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக்குழு நிர்வாகிகள், இன்று ஆலோசனை நடத்துகின்றனர். பங்களிப்பு ஓய்வு ஊதியத் திட்டம் ரத்து; தமிழை முதல் பாடமாக்க அரசாணை வெளியீடு; இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம்; ஆசிரியர்களுக்கு தனிப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்காக, கடந்த 12 ஆண்டு களுக்கு பின், 29 சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மார்ச் 8ல், தமிழகம் முழுவதும் பேரணி நடத்தியது. தொடர்ந்து, ஏப்., 19ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளது.இந்நிலையில், ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக் குழுவில், மேலும், 10 ஆசிரியர் சங்கங்கள் இணைய முன்வந்துள்ளன. இதற்கான இணைப்பு மற்றும் அடுத்தகட்ட போராட்டம் குறித்த, ஜாக்டோ குழு ஆலோசனைக் கூட்டம், இன்று சென்னையில் நடக்கிறது.இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகி, தமிழ்வாணன் கூறுகை யில்,

''ஜாக்டோ உயர்மட்டக் குழுக் கூட்டம், சைதாப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க அலுவலகத்தில் நடக்கிறது. பல புதிய சங்கங்கள் ஜாக்டோவில் இணைப்பது; ஏப்., 19ம் தேதி, உண்ணாவிரதத்தை பல ஆயிரம் பேரைத் திரட்டி வெற்றி பெற வைப்பது குறித்தும், உயர்மட்டக் குழுவினர் பேச்சு நடத்துகின்றனர்,'' என்றார்.ஜாக்டோ போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அரசுக்கு நெருக்கடி ஏற்படாமல் சமாளிக்க, கடந்த பிப்ரவரியில், ஜாக்டோ குழுவினர் முதல்வர் சந்திக்க, கல்வித் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். ஆனால், ஜாக்டோ குழுவினர் தலைமைச் செயலகத்துக்கு அழைக்கப்பட்டு, பின், நான்கு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.முதல்வர் தங்களை சந்திக்காத நிலையில், மீண்டும் ஜாக்டோ குழுவை, அரசே அழைக்க வைக்கும் வகையில்,போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து, இன்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக, ஜாக்டோ வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சிக்கு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை வடிகட்டஉத்தரவு

அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, 'வடிகட்ட', தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நடப்பு (2014 - 15) கல்வி ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, அரசு பள்ளி மாணவ, மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, கல்வித்துறை கெடுபிடி காட்டி வந்தது.இதற்கேற்ப, காலாண்டு, அரையாண்டுத் தேர்வு முடிவுகள் அடிப்படையில், மதிப்பெண் குறைந்த மாணவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும், அவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.'தேர்ச்சி விகிதம் குறையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற அதிகாரிகளின் மறைமுக மிரட்டல்களால், தலைமை ஆசிரியர்கள், கடும் மன உளைச்சல் அடைந்தனர்.

பிளஸ் 2 தேர்வில், ஓரளவிற்கு, எதிர்பார்த்த, 'ரிசல்ட்' வந்து விடுகிறது. ஆனால், 10ம் வகுப்பு முடிவு, கல்வித்துறைக்கு திருப்தி அளிக்கவில்லை. இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என்பதால், தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத மாணவர்களும், ஒன்பதாம் வகுப்புக்கு வந்து விடுகின்றனர். மாணவர்களை 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற வைப்பது, ஆசிரியர்களுக்கு பெரிய சவாலான விஷயமாக உள்ளது.'பத்தாம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்ட வேண்டும் எனில், ஒன்பதாம் வகுப்பில், சரியாக படிக்காத மாணவர்களை, 'வடிகட்ட' வேண்டியது முக்கியம். இந்த உத்தரவை, நடப்பு கல்வி ஆண்டில் இருந்தே கடைபிடிக்க வேண்டும்' என, கல்வித்துறை அதிகாரிகள், வாய்வழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது

.எனவே, சமீபத்தில், ஒன்பதாம் வகுப்பு தேர்வை எழுதிய மாணவர்களில், அதிக மதிப்பெண் பெறாத மாணவ, மாணவியரை, 'பெயில்' செய்ய, தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுத்துள்ளனர்.இதனால், அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறையலாம். ஆசிரியர் கூறுவது என்ன? ஆசிரியர் சிலர் கூறியதாவது: ஒன்பதாம் வகுப்பில், சரியாக படிக்காத மாணவர்களை, 'பெயில்' செய்வதன் மூலம், தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்கள் மட்டுமே, 10ம் வகுப்பில் இடம் பெறுவர். இதனால், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரிக்கும். துறையின் புதிய உத்தரவால், கடந்த ஆண்டை விட (2013 - 14), நடப்பு கல்வியாண்டில் (2014 - 15), ஒன்பதாம் வகுப்பில் அதிக மாணவர்கள், 'பெயில்' ஆக வாய்ப்புள்ளது, என்றனர்.

Saturday, March 28, 2015

அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகள் 2 நாள் இரவு வரை நீட்டிப்பு

மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை திங்கள், செவ்வாய்க்கிழமைளில் இரவு 8 மணி வரை நீட்டித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் அரசு விடுமுறை வருவதை ஒட்டி ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில், இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்தி:

நிகழ் நிதியாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதன்பின் தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் வருகின்றன. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அடிப்படையில், மார்ச் 30, 31-ஆம் தேதிகளில் இந்தியன் வங்கி மூலம் நடைபெறும் மத்திய, மாநில அரசுகளின் பணப் பரிவர்த்தனைகள் இரவு 8 மணி வரை நடைபெறும். மேலும், மின்னணு பணப் பரிவர்த்தனைகளும் மார்ச் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை நாள்கள் விடுமுறை? தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மார்ச் 30-ஆம் தேதியும் (திங்கள்கிழமை), நிகழ் நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31-ஆம் தேதியும் (செவ்வாய்க்கிழமை) வழக்கம்போல் செயல்படும்.

மேலும், வங்கிக் கணக்குகள் முடிக்கப்படுவதால் ஏப்ரல் 1-ஆம் தேதியும், ஏப்ரல் 2-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3-ஆம் தேதி புனித வெள்ளி ஆகிய மூன்று நாள்களும் தொடர் விடுமுறையாகும். ஏப்ரல் 4-ஆம் தேதி அரை நாள் மட்டும் செயல்படும். இதனால், அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை இரவு வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

துவக்க பள்ளிகளுக்கு நிதி இல்லை

அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த அரசு நிதி ஒதுக்கியுள்ளது ஆனால் துவக்க பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காததால், மாணவர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், அனைத்து அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த, இக்கல்வியாண்டு முதல் நிதி ஒதுக்கீடு செய்து, விழா நடக்கிறது.

இதற்காக நடுநிலை பள்ளிகளுக்கு ரூ.2,350, உயர்நிலை பள்ளிகளுக்கு ரூ.2,450 வழங்கியுள்ளது. இந்நிதியில் ஆண்டுவிழா, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதேசமயம் துவக்கப்பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நிதி ஒதுக்கவில்லை. ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: சிறு குழந்தைகளை வேடிக்கை பார்க்க வைத்து விட்டு, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கியது பாரபட்சமே. வரும் காலங்களிலாவது அனைத்து பள்ளிகளுக்கும் நிதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும், என்றார்.

தமிழ் பாடம்.கட்டாயம்.முதல் வகுப்பு புத்தகம் தயார்

'நடப்பு கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளும், கட்டாயமாக தமிழ் மொழி பாடம் கற்றலை, முதல் வகுப்பில், நடைமுறைப்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

'பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன' என, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும், 2015-16ம் கல்வியாண்டில் இருந்து, முதல் வகுப்பில் தொடங்கி, படிப்படியாக தமிழ் கற்பிக்கப்படுதல் வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 2015-16ல், பல வாரியங்களை சேர்ந்த, அனைத்து பள்ளிகளும், கட்டாயமாக, தமிழ் மொழி பாடம் கற்றலை, முதல் வகுப்பில், நடைமுறைப்படுத்த வேண்டும்.

முதல் வகுப்பிற்கான, தமிழ் பாடநூல்கள் அச்சிடப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின், சென்னை மற்றும் மதுரை வட்டார அலுவலகத்தில், விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், சென்னை வட்டார அலுவலகத்தில், புத்தகங்கள் வாங்கலாம். மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், மதுரை வட்டார அலுவலகத்தில், பாடப்புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். முதல் வகுப்பு தமிழ் பாடநூல் விலை, 60 ரூபாய்.

Friday, March 27, 2015

முதுகலை பட்டதாரி பணியிடத்திற்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.

அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இணையதளம் மூலம் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 முதல் 50 பேர் வரை மட்டுமே இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். எனவே, முழு அடைப்பு நாளிலும் கலந்தாய்வை நடத்துவதில் பிரச்னை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரிசை எண் அடிப்படையில்.... முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு ஆண்டு வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும்.

முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும், பின்னர், வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட பணி நாடுநர்கள் அனைவரும் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக் கழக டிசம்பர் மாத தேர்வு முடிவுகள்

Click below

http://annamalaiuniversity.ac.in/dde/get_number.php

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

Click below


https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21WUI2N3hpWFJ2am8/view?usp=sharing