இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, July 02, 2015

பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க 60ஆசிரியர்களுக்கு பயிற்சி

பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தைவிட குறைவாக உள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மாணவிகளைவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 4.9 சதவீதம் குறைவாக இருந்தது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகளைவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 5.9 சதவீதம் குறைவாகவே இருந்தது.

எனவே, மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சியை வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் 10-ஆம் வகுப்புக்கு பாடம் நடத்தும் 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை மாணவர்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. அந்தப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, இரு பாலரும் படிக்கும் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்று அதிகமாக உள்ளது. மகளிர் மட்டும் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ளது தேர்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு பயிற்சியின்போது, கடந்த சில ஆண்டுகளில் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பொதுத் தேர்வுகளுக்காக தயாரிக்கப்பட்ட சி.டி.க்களின் பிரதிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அதோடு, அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது அனுபவத்தை ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களில் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதில்லை. எனவே, இந்தப் பாடங்களில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்காக ஆசிரியர்களுக்கு தனியான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5 நாள்களாக இருந்த பணியிடைப் பயிற்சி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது என அவர்களிடம் ஆய்வும் நடத்தப்பட உள்ளது. அதோடு, இந்தப் பயிற்சியில் அவர்கள் என்ன தெரிந்துகொண்டார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக பயிற்சி அட்டைகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இதேபோன்று சிறப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment